சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டிக்கு முன்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், தோனியின் ஈடுபாடு மற்றும் மற்றொரு வீரரின் காயம் குறித்து விரிவாகப் பேசினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் சிஎஸ்கே 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. அப்போட்டியில் சென்னை அணி 127 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ராஜஸ்தானின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 15 பந்துகளில் அரைசதம் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார். காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக தோனி முதல் 2 வாரங்கள் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் இல்லாத சென்னை அணி முதல் போட்டியிலேயே தடுமாற்றத்தைக் கண்டது. மேலும், தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இருவருமே இல்லாமல் 277 போட்டிகளுக்குப் பிறகு சிஎஸ்கே ஒரு ஆட்டத்தில் களமிறங்கியது இதுவே முதல்முறையாகும்.

தோனி சிஎஸ்கே அணியில் இல்லாதது குறித்துப் பேசிய பயிற்சியாளர் பிளெமிங், "இது தோனி இல்லாமல் விளையாடும் ஒரு சாதாரண போட்டி மட்டுமே. அவர் களத்தில் விளையாடாவிட்டாலும், இன்னும் அணியுடன் தான் உள்ளார். அணியின் செயல்பாடுகளில் அவரது ஈடுபாடும், தாக்கமும் அதிக அளவிலேயே இருக்கிறது" என்று கூறினார்.
மேலும், காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடாத இளம் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரேவிஸ் குறித்தும் அவர் பேசினார். "பிரேவிஸ் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான மறுவாழ்வு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் விரைவில் அணிக்கு திரும்புவார் என நம்புகிறோம்" என தெரிவித்தார். கடந்த சீசனில் மாற்று வீரராக வந்த பிரேவிஸ், 6 இன்னிங்ஸ்களில் 180 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2 அரைசதங்கள் உட்பட 225 ரன்கள் குவித்து மிரட்டியது குறிப்பிடத்தக்கது.

2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் திட்டம் குறித்துப் பேசிய அவர், "அனுபவம் மற்றும் இளமை என இரண்டிலும் நாங்கள் முதலீடு செய்துள்ளோம். அணியில் நல்ல உத்வேகம் உள்ளது. முதல் போட்டி எப்போதும் ஒரு அளவுகோல்தான், இனிவரும் போட்டிகளில் சிறப்பாகத் தொடங்குவதில் கவனம் செலுத்துவோம்" என பிளெமிங் நம்பிக்கையுடன் பேசினார்.