சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினை விடுவிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் அது தொடர்பாக பல விவாதங்கள் எழுந்துள்ளது அஸ்வினை அணியை விட்டு நீக்குவது சரியான முடிவு என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்து இருந்தார்.
அஸ்வின் போன்ற ஜாம்பவான் சிஎஸ்கே அணியில் தொடர வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத், அஸ்வினுக்கு தரப்பட்டிருக்கும் சம்பளம் மிகவும் அதிகம் என பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து பேசிய அவர் கண்டிப்பாக சிஎஸ்கே அணிக்கு அஸ்வின் பல நன்மைகளை தருவார். ஆனால் அதற்கு 10 கோடி ரூபாய் தேவை இல்லை என்று தான் நான் சொல்வேன். ஐபிஎல் போன்ற தொடரில் ஒரு கட்டத்தில் வீரரையும் அதற்கான பணத்தை நாம் யோசிக்க வேண்டும். அஸ்வின் தற்போது கிரிக்கெட்டின் உச்சத்தில் இல்லை.
அதனால் தான் நான் ஆரம்பத்தில் இருந்து அஸ்வினை சிஎஸ்கே அணி விடுவிக்க வேண்டும் என்று கூறி வருகின்றேன். இதேபோன்று தோனி சிஎஸ்கே அணியில் விளையாடுவாரா மாட்டாரா என்று எனக்கு தெரியவில்லை. அதற்கான முடிவை இன்னும் சிஎஸ்கே அணி நிர்வாகம் எடுக்கவில்லை.
அடுத்த சீசனில் தோனி சில போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக சேப்பாக்கத்தில் விளையாடலாம்.
ஏனென்றால் தோனி விளையாடுவதால் அது வர்த்தக ரீதியில் பல லாபத்தை சிஎஸ்கே அணிக்கு கொடுக்கும். சிஎஸ்கே அணியின் வர்த்தகம் மேலும் அதிகரிக்கும். இதனால் ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பு வரை தோனி தன்னுடைய முடிவை அறிவிக்க மாட்டார்.
இதே போல் சஞ்சு சான்சன் சிஎஸ்கே அணிக்குள் வந்தால் அது நிச்சயம் பல குழப்பங்களை ஏற்படுத்தும் என நான் நினைக்கின்றேன்.ரியான் பராக், ராஜஸ்தான் அணியில் இருப்பதன் காரணமாக தான் சஞ்சு சாம்சன் அணியை விட்டு வெளியேறுகிறார் என்று நினைக்கின்றேன் என்று பத்ரிநாத் தெரிவித்துள்ளார். அஸ்வின் நண்பரான பத்ரிநாத், அவருக்கு எதிராக கருத்து கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.