சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ஆர் சி பி கடைசியாக 2008 ஆம் ஆண்டு சிஎஸ்கே எதிராக வெற்றி பெற்றது.
கடந்த 16 ஆண்டுகளாக ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வியை தழுவி வரும் நிலையில் இந்த சோகமான சாதனையை மாற்ற வேண்டிய உத்வேகத்தில் ஆர் சி பி களமிறங்கி உள்ளது. எனினும் சிஎஸ்கே அணியில் தலைசிறந்த மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பது ஆர் சி பி அணிக்கு தலைவலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர் சி பி அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக், சிஎஸ்கே வின் சுழற்பந்துவீச்சு அபாயத்தை எதிர்கொள்ள விராட் கோலி ஒருவரே போதும் என்று தெரிவித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்திருக்கிறார்.
அந்த தொடரில் சுழற் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். நான் புள்ளி விவரங்கள் குறித்து பெரியதாக பேச விரும்பவில்லை. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கூட விராட் கோலி ரன் எடுத்து இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் அவர் ரன் சேர்க்கவில்லை என்றாலும் அந்த தொடர் முழுவதும் அவர் நன்றாக ரன் சேர்த்து இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெயரைப் பெற்று இருக்கிறார்.
துபாய் போன்ற மைதானங்களில் சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ளாமல் இந்த பெயரை அவரால் பெற்றிருக்க முடியாது. எனவே எனக்கு விராட் கோலி மீது முழு நம்பிக்கை இருக்கின்றது. நேற்று நாங்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கூட நான் களத்தை விட்டு வெளியே வந்தேன். ஆனால் விராட் கோலி மீண்டும் ஒருமுறை பேட்டிங் பயிற்சி செய்ய வேண்டும் என நினைத்தால் இவ்வளவு சாதித்த பிறகும் மீண்டும் ஒருமுறை பயிற்சி எடுக்க வேண்டும் என்ற பசி விராட் கோலிக்கு இருக்கிறது.
இது அவருடைய மன உத்வேகத்தை காட்டுகிறது. விராட் கோலி எப்போதுமே பேட்டிங்கில் முன்னேற வேண்டும் என நினைப்பார். தனக்கான உச்ச வரம்பை அவரை உயர்த்திக் கொள்வார். விராட் கோலி ஒரு ஸ்பெஷலான வீரர். தற்போது அவர் நம்பிக்கையுடன் விளையாடி வருகிறார். விராட் கோலி மட்டுமல்ல டிம் டேவிட், லிவிங்ஸ்டோன் போன்ற அதிரடி வீரர்களும் இருப்பதால் சிஎஸ்கே சுழற்பந்து வீச்சு குறித்து எங்களது கவலை இல்லை என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.