சென்னை : ஐபிஎல் தொடக்க விழா நிகழ்ச்சி மேடைக்கு சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கோப்பையுடன் வந்த போது, ரசிகர்கள் அனைவரும் தோனி, தோனி என்று கோஷம் எழுப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பாகுபலி 2ஆம் பாகத்தில் நடிகர் பிரபாஸ் தளபதியாக உறுதிமொழி எடுக்கும் காட்சியில், "பாகுபலி என்னும் நான்" என்று சொல்லும் போது, அங்கு கூடியிருந்த ஒட்டுமொத்த படையும், மக்களும் ஒன்றாக குரல் எழுப்பி, அந்த இடத்தையே அதிர வைப்பார்கள். இதனால் புதிய அரசனான ராணாவும், ரம்யா கிருஷ்ணனும் மிரளும் வகையில் காட்சியில் அமைக்கப்பட்டிருக்கும்.

கிட்டத்தட்ட சேப்பாக்கம் மைதானத்தில் அப்படியொரு காட்சியை சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் அரங்கேற்றிவிட்டார்கள். ஐபிஎல் தொடக்க விழாவில் நடிகர் அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப் இருவரும் நடனமாடி தொடங்கி வைக்க, பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான், சோனு நிகம், ஏ.ஆர்.அமீன் மற்றும் ஸ்வேதா மோகன் உள்ளிட்டோர் பாடல்களை பாடி அசத்தினார்கள்.
குறிப்பாக பல்லேலக்கா, என்னுயிரே, நன்னாரே, மசக்களி, ஜன கன மன, ஜெய் ஹோ உள்ளிட்ட பாடல்களை பாடிய போது சேப்பாக்கம் மைதான ரசிகர்கள் ஒட்டு மொத்தமாக வைப் செய்ய தொடங்கினார்கள். ஆனால் பத்து தல படத்தின் நீ சிங்கம் தான் பாடலை பாடிய போது, சேப்பாக்கம் மைதாமே அதிர்ந்தது என்று சொல்லலாம். அத்தனை கண்களும் தோனியை தேடின.
இதன்பின் ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் மேடைக்கு அழைக்கப்பட்டனர். அப்போது ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளஸிஸ் மேடைக்கு வர, பின்னர் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கோப்பையுடன் மேடையேறினார். அப்போது சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்கள் ஒரே குரலில் தோனி.. தோனி என்று கோஷம் எழுப்ப தொடங்கினார்கள்.
சில நிமிடங்கள் நீடித்த அந்த கோஷத்தால், சேப்பாக்கம் மைதானத்தில் பாகுபலி காட்சி கண்முன் நிகழ்ந்தது. ருதுராஜ் கெய்க்வாட் கோப்பையுடன் வந்த இடம் தோனியுடையது என்று சொல்லும் வகையில் ரசிகர்களின் கோஷம் அமைந்தது. இதன் மூலம் ருதுராஜ் கெய்க்வாட் யாருடைய இடத்தை நிரப்ப தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது அவருக்கும் புரிந்திருக்கும் என்று பார்க்கப்படுகிறது.