சென்னை: சிஎஸ்கே அணியில் இருந்து சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், விஜய் சங்கர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை கழற்றிவிட வேண்டும் என்று முன்னாள் வீரர் பத்ரிநாத் ஆவேசமாக தெரிவித்துள்ளார். அப்போதுதான் அடுத்த ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணியின் கைகளில் சிறந்த வீரர்களை வாங்க நல்ல தொகை கைகளில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடர் வரலாற்றில் சிஎஸ்கே அணி முதல்முறையாக தொடர்ந்து 2 சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் மோசான சாதனையை படைத்துள்ளது. இதுவரை சிஎஸ்கே அணி விளையாடிய 10 போட்டிகளில் 2 வெற்றி, 8 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. இதனால் ரசிகர்கள் சிஎஸ்கே அணி மீது அதிருப்தியில் இருக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் அடுத்த சீசனுக்குள் சீனியர் வீரர்கள் பலரையும் சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கொந்தளித்து வருகின்றனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத், சீனியர் வீரர்களை கடுமையாக சாடி இருக்கிறார். அதில் பத்ரிநாத் பேசுகையில், என் நண்பன் அஸ்வின் மீது உச்சபட்ச மரியாதை இருக்கிறது.
ஆனால் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியில் இருந்து அஸ்வின் விடுவிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அவருடன் சேர்த்து விஜய் சங்கரையும் விடுவிக்கும் முடிவுக்கு சிஎஸ்கே அணி வர வேண்டும். அவர்கள் இருவரையும் விடுவித்தால் சிஎஸ்கே அணியின் கைகளில் ரூ.14 கோடி வரை இருக்கும். அவர்களுடன் சேர்த்து இன்னும் சில வீரர்களையும் விடுவித்து குறைந்தது ரூ.20 கோடியுடன் மினி ஏலத்திற்கு செல்ல வேண்டும்.
அதன்பின் பிக் பேஷ் அல்லது வேறு லீக் தொடர்களில் சிறப்பாக விளையாடுவோரை வாங்க முயற்சிக்க வேண்டும். ஒருவேளை நான் சிஎஸ்கே அணி நிர்வாகத்தில் இருந்தால், நிச்சயமாக ஜடேஜாவையும் சேர்த்து விடுவிக்கும் முடிவை எடுப்பேன். ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஜடேஜாவுடன் நல்ல நட்பில் நீண்ட காலமாக இருப்பதால், அதுபோன்ற முடிவுகளை எடுக்க மாட்டார்கள்.
அதேபோல் சாம் கரண் நம்பர் 3 வீரராகவும், ஜடேஜா நம்பர் 4 வீரராகவும் விளையாடுகிறார்கள். சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது என்பதை என்னால் கொஞ்சம் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. முதலில் சாம் கரண் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் ஏன் இருக்கிறார் என்பதே தெரியவில்லை. அவரால் 4 ஓவர்களை முழுமையாக பவுலிங் செய்ய முடியாது.
அதேபோல் பேட்டிங்கில் சாம் கரண் நம்பிக்கையில்லாமல் இருக்கிறார். அவரால் எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங்கிலும் ரன்களை சேர்க்க முடியவில்லை. சிஎஸ்கே எதற்காக மீண்டும் சாம் கரணுக்கு வாய்ப்பு அளித்து, நம்பர் 3ல் களமிறக்கி வருகிறது என்பதே புரியவில்லை. ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனான பிரெவிஸ் நம்பர் 5 வீரராக வருவது ஏன் என்று தெரியவில்லை.
சிஎஸ்கே அணி மொத்தமாக குழப்பத்தில் இருப்பதாக நினைக்கிறேன். அதேபோல் பிளே ஆஃப் சுற்றில் இருந்து சிஎஸ்கே அணி வெளியேறி இருப்பதால், இனி பிரச்சனைகளை சரி செய்வதற்கு காலம் தாமதம் ஏற்பட்டுவிட்டது என்றும் விமர்சித்துள்ளார். பத்ரிநாத்தின் கருத்துகள் சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.