சென்னை: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி அடைந்த தோல்விக்கு ஃபீல்டிங்கே காரணம் என்று கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடையாதது மகிழ்ச்சி என்று கூறிய ருதுராஜ், பேட்டிங்கின் போது ஆர்சிபி அணி கொஞ்சம் கூட தங்களின் திட்டத்தில் இருந்து இறங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
18வது ஐபிஎல் தொடருக்கான 8வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சிஎஸ்கே அணியின் 3வது மோசமான தோல்வியாக இது அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 2008ஆம் ஆண்டுக்கு பின் முதல்முறையாக ஆர்சிபி அணியிடம் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்திருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை விளாசியது. இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை மட்டுமே சேர்த்தது. கடைசி நேரத்தில் வந்த தோனி 16 பந்துகளில் 30 ரன்களை விளாசி அசத்தினார். இது மட்டுமே சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
இந்த தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், இந்த பிட்சில் 170 ரன்கள் தான் சிறந்த ஸ்கோர் என்று கருதுகிறேன். ஃபீல்டிங்கில் எங்களுக்கு மோசமான நாளாக அமைந்தது. அதுதான் தோல்விக்கு காரணம் என்று நினைக்கிறேன். இதுபோன்ற பந்து நின்று வரும் பிட்சில், கூடுதலாக 20 ரன்களை சேஸிங் செய்வது எளிதல்ல.
அதற்கு கொஞ்சம் வித்தியாசமாக பேட்டிங் செய்ய வேண்டும். நான் பேட்டிங் ஆடும் போது பிட்ச் இன்னும் ஸ்லோவாகவும், நின்றும் வரத் தொடங்கியது. பிட்சில் அது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. ராகுல் திரிப்பாட்டி அவரின் ஷாட்டை விளையாட முயற்சித்தார். நானும் எனது ஷாட்டை ஆட முயற்சித்தேன். சில நேரங்களில் அது சரியாக நடக்கும்.
சில நேரங்களில் நாம் நினைத்தது நடக்காது. மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்காதது மகிழ்ச்சிதான். 3 உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் அணியில் இருக்கும் போது, புதிதாக களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் அவர்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். ஆனால் இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி பக்கமே காற்று அடித்து கொண்டிருந்தது.
கடைசி ஓவர் வரை அந்த அதிர்ஷ்டம் நிற்கவில்லை. அடுத்த போட்டிக்கு முன் அதிகமாக ஆலோசிப்பதற்கு நேரமில்லை. கவுகாத்திக்கு செல்ல வேண்டும். அதனால் நல்ல மனநிலையில் அடுத்த போட்டியில் விளையாட வேண்டும். ஃபீல்டிங்கில் கூடுதலாக முன்னேற வேண்டும். சிறந்த கம்பேக்கை கொடுப்போம் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.