சென்னை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி அடுத்தடுத்து படுதோல்வியை சந்தித்து பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறி இருக்கிறது. மெகா ஏலத்திற்கு பின் நடக்கும் தொடரில் சிஎஸ்கே அணி இவ்வளவு பெரிய பின்னடைவை சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இதற்கு சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக சீனியர் வீரர்கள் மீது முதலீடு செய்து வந்ததே காரணமாக பார்க்கப்படுகிறது.
இளம் வீரர்களை தயார் செய்யாமல், சிஎஸ்கே அணி அனுபவ வீரர்களை வாங்கியதன் விளைவை இந்த சீசனில் அனுபவித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த சீசனுக்கான அணியை கட்டமைக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் தயாராகி வருகிறது. அதேபோல் இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களை தயார் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறது.

ஏற்கனவே ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரெவிஸ் என்று இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே அணி வாய்ப்பு வழங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, அடுத்த சீசனில் விளையாடுவீர்களா என்ற கேள்விக்கு அதிர்ச்சியான பதில் ஒன்றை அளித்திருந்தார். அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்பதே சந்தேகம்தான் என்று ஜாலியாக பதில் அளித்திருந்தார்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி தரப்பில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஊர்வில் படேல்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் ட்ரையல்ஸ்-க்கு ஊர்வில் படேல் அழைக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வந்த கார்த்திக் சர்மா சிஎஸ்கே அணியுடன் பயணித்து வருகிறார்.
தற்போது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஊர்வில் படேல் அழைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்திருக்கிறார். சையத் முஷ்டாக் அலி தொடரில் அபாரமாக ஆடிய ஊர்வில் படேல், 28 பந்துகளில் சதம் விளாசி பலரையும் ஈர்த்திருந்தார். ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் விளையாடிய அவரை, எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியால் ஊர்வில் படேல் ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிஎஸ்கே அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக கான்வே மற்றும் வன்ஷ் பேடி ஆகியோர் இருக்கின்றனர். தற்போது, 3வது வீரராக ஊர்வில் படேல் அழைக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.