சென்னை : ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அடித்த பந்தை சிக்சர் லைனில் ரஹானே புத்திசாலித்தனமாக கேட்ச் பிடித்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் ஏலத்தின் போது சிஎஸ்கே அணி தரப்பில் ரச்சின் ரவீந்திரா ரூ.1.8 கோடிக்கும், முஷ்டாஃபிசுர் ரஹ்மான் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கும் வாங்கப்பட்டனர். மற்ற அணிகள் யாரும் பெரிதாக வாங்க ஆர்வம் காட்டாத சூழலில், சிஎஸ்கே அணி நம்பிக்கையுடன் வாங்கியது. பேக் அப் வீரர்களாகவே இவர்கள் இருவரும் பார்க்கப்பட்ட நிலையில், கான்வே மற்றும் பதிரனா இருவரும் காயமடைந்ததால், நேரடியாக பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி களமிறங்கியது. இந்த போட்டியிலேயே ரச்சின் ரவீந்திரா மற்றும் முஷ்டாஃபிசுர் ரஹ்மான் இருவரும் சிஎஸ்கே அணிக்காக அறிமுகம் செய்யப்படுவதாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அறிவித்தார். இதனை தொடர்ந்து முஷ்டாஃபிசுர் ரஹ்மான் வீசிய முதல் ஓவரிலேயே அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த டூ பிளஸிஸ், ரச்சின் ரவீந்திராவின் அபாரமான கேட்சால் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து பட்டிதர் டக் அவுட்டாகி வெளியேற, ஆர்சிபி அணி 41 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல்லும் தீபக் சஹர் பந்தில் டக் அவுட்டாக, ஆர்சிபி அணியின் பேட்டிங் பொறுப்பு மொத்தமாக விராட் கோலியின் தலையில் விழுந்தது. விராட் கோலி ஸ்பின்னர்களை அட்டாக் செய்வதில் கொஞ்சம் தடுமாறுவதை அறிந்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தீக்சனா, ஜடேஜாவை அட்டாக்கில் கொண்டு வந்தார்.
தீக்சனா வீசிய ஓவரில் ஒரு சிக்சரை அடித்து விராட் கோலி ஆர்ப்பரிக்க, தொடர்ந்து ஜடேஜா வீசிய ஓவரில் ஒரு ரன் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதனால் 10 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி ஸ்கோர் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 76 ரன்களாக இருந்தது. இதன்பின் முஷ்டாஃபிசுர் ரஹ்மானிடம் பந்தை கொடுத்தார் ருதுராஜ் கெய்க்வாட். அவர் வேகத்தை குறைத்து வீசுவதை அறிந்து விராட் கோலி அட்டாக் செய்யும் முடிவுகள் களத்தில் இருந்தார்.
அவர் வீசிய முதல் பந்திலேயே சிக்சர் அடிக்க முயற்சித்து டவுன் தி டிராக் இறங்கி வந்து டீப் மிட் விக்கெட் திசையில் பறக்கவிட்டார். அது சிக்சருக்கு செல்லும் என்று பார்க்கப்பட்ட நிலையில், திடீரென உள்ளே புகுந்த ரஹானே அதனை பிடித்து வெளியில் தூக்கி வீசினார். அதனை லாவகமாக ரச்சின் ரவீந்திரா பிடிக்க, விராட் கோலி 20 பந்துகளில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஹானே கேட்ச் பிடித்த பின் சறுக்கி கொண்டே பவுண்டரி லைனுக்கு அருகில் செல்வதை உணர்ந்து, புத்திசாலித்தனமாக ரச்சினுக்கு தூக்கியெறிந்தது விராட் கோலி விக்கெட்டை வீழ்த்த முக்கிய காரணமாக அமைந்தது.