சென்னை: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி வீரர்கள் மோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. நூர் அஹ்மத், தீபக் ஹூடா, ராகுல் திரிப்பாட்டி, கலீல் அஹ்மத் என்று பாதி வீரர்கள் கேட்சை கோட்டைவிட்டது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் 51 ரன்களை விளாசினார்.

சிஎஸ்கே அணி தரப்பில் சிறப்பாக பவுலிங் செய்த நூர் அஹ்மத் 4 ஓவர்களில் 36 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வீரர்களின் ஃபீல்டிங் அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. ஏனென்றால் சிஎஸ்கே அணி வீரர்கள் 4 முறை கேட்சை கோட்டைவிட்டுள்ளனர்.
பவர் பிளே ஓவர்களின் போது விராட் கோலி கொடுத்த கடினமான கேட்சை நூர் அஹ்மத் கோட்டைவிட்டார். இந்த கேட்சை கோட்டைவிட்டதால் கூட சிஎஸ்கே அணிக்கு பெரியளவில் பின்னடைவு ஏற்படவில்லை. ஆனால் ரஜத் பட்டிதார் 17 ரன்களில் இருந்த போது, ஜடேஜாவின் பவுலிங்கில் லாங் ஆஃப் திசையில் தூக்கி அடித்தார். அந்த பந்து நேராக ஃபீல்டரை தேடி சென்றது என்றே சொல்லலாம்.
ஆனால் தீபக் ஹூடா கொஞ்சம் கூட கவனமாக இல்லாமல் எளிய கேட்சை கோட்டைவிட்டார். இதனைத் தொடர்ந்து மீண்டும் நூர் அஹ்மத் வீசிய அடுத்த ஓவரிலேயே ரஜத் பட்டிதார் ஸ்கொயர் திசையில் கொடுத்த கேட்சை ராகுல் திரிப்பாட்டி கோட்டைவிட்டார். அதே ஓவரில் மீண்டும் ரஜத் பட்டிதார் கொடுத்த கேட்சை கலீல் அஹ்மத் கோட்டைவிட்டார்.
இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் சோகமடைந்தனர். 3 கேட்ச்களை ரஜத் பட்டிதாருக்கு கோட்டைவிட்டதால், அவர் அதிரடியாக விளையாடி 51 ரன்களை விளாசினார். சிஎஸ்கே அணியின் மோசமான ஃபீல்டிங் காரணமாக ஆர்சிபி அணி கூடுதலாக 35 ரன்களை விளாசி இருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணி வெல்லுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.