பெங்களூர்: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. இந்த போட்டிக்கான பயிற்சியில் சிஎஸ்கே அணி வீரர்கள் ஈடுபட்ட நிலையில், நேற்று திடீரென மழை பெய்ய தொடங்கியது. இதனால் மாலை 3 மணிக்கு தொடங்கிய சிஎஸ்கே அணியின் பயிற்சி, 45 நிமிடங்களில் நிறைவடைந்தது தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்ததால், சிஎஸ்கே அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் ரசிகர்களையும் ஆர்சிபி ரசிகர்கள் கடுமையாக நடத்தினர்.

இதனால் மும்பை - சிஎஸ்கே இடையிலான ரைவல்ரியை விடவும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையிலான ரைவல்ரி அடுத்த கட்டத்திற்கு சென்றது. இந்த சீசனை பொறுத்தவரை ஆர்சிபி அணி சிறந்த ஃபார்மில் விளையாடி வருகிறது. ஆனால் சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 8ல் தோல்வியடைந்து முதல் அணியாக பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறி இருக்கிறது.
இதனால் ஆர்சிபி அணியே இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் சிஎஸ்கே அணி தரப்பில் விளையாடி வரும் ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரெவிஸ், சிவம் துபே, சாம் கரண் ஆகியோர் ஃபார்முக்கு வந்துள்ளனர். இதனால் ஆர்சிபி அணி சிறிய தவறு செய்தாலும், சிஎஸ்கே அணியை கொஞ்சம் கூட அவர்களால் கட்டுப்படுத்த முடியாது.
இருந்தாலும் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. பெங்களூரில் கடந்த 2 நாட்களாகவே மழை பெய்து வரும் நிலையில், இன்று மாலையும் 70 சதவிகிதம் வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம் மழைக் காரணமாக 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் மழை காரணமாக சிஎஸ்கே அணியின் பயிற்சியும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சின்னச்சாமி மைதானத்தில் நேற்று மாலை 3 மணிக்கு சிஎஸ்கே அணியின் வீரர்கள் பயிற்சியை தொடங்கி இருக்கின்றனர். 45 நிமிடங்கள் பயிற்சி செய்த நிலையில், திடீரென கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக சிஎஸ்கே வீரர்கள் உடனடியாக ஓய்வறைக்கு திரும்பியுள்ளனர். தொடர்ந்து மழை பெய்ததால், இரு அணிகளின் பயிற்சியும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த போட்டியை பொறுத்தவரை மழை பெய்தாலும், சிறிது நேரத்தில் நின்றாலே போதுமானது. ஏனென்றால் சின்னச்சாமி மைதானத்தின் வடிகால் வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டிருக்கின்றன. இதனால் போட்டி நடப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்று பார்க்கப்படுகிறது.