சென்னை : சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நியூசிலாந்து அணியில் டேரல் மிட்சல், தற்போது டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி களமிறங்கவுள்ளது. இதற்காக சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் அம்பதி ராயுடுவின் இடத்தில் எந்த வீரர் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்காக சிஎஸ்கே அணி தரப்பில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான டேரல் மிட்சல், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இளம் வீரர் சமீர் ரிஸ்வி உள்ளிட்டோர் வாங்கப்பட்டனர். குறிப்பாக டேரல் மிட்சலுக்கு ரூ.14 கோடி கொடுத்து சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்கியது. இவரை வாங்குவதற்கு மற்ற அணிகள் ஆர்வம் காட்டிய போதும், சிஎஸ்கே அணி விட்டுக் கொடுக்கும் மனநிலையில் இல்லை.
இதற்கு உலகக்கோப்பை தொடரில் டேரல் மிட்சல் ஆடிய ஆட்டமே காரணம். இந்திய அணிக்காக எதிரான 2 போட்டிகளிலும் நியூசிலாந்து அணியின் டேரல் மிட்சல் சதம் விளாசி அசத்தினார். அதேபோல் ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் இருவரையும் சமபலம் கொடுத்து அடிக்கும் திறமையை மிட்சல் பெற்றுள்ளார். கிட்டத்தட்ட ராயுடுவின் இடத்தை மிட்சலால் நிரப்ப முடியும் என்று கருதப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் பயிற்சியாளர் பிளெம்மிங்கின் பரிந்துரையும் சேர, சிஎஸ்கே அணி நிர்வாகம் மிட்சலை தட்டித் தூக்கியது. இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணிக்காக மிட்சல் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சிஎஸ்கே அணிக்காக அறிமுகமாவதற்கு முன்பாகவே டேரல் மிட்சலுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.
அமெரிக்காவில் நடத்தப்பட்டு வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியின் தம்பியான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்த அணிக்காக டேரல் மிட்சல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சிஎஸ்கே அணியில் இருந்து பிராவோ, சான்ட்னர், கான்வே உள்ளிட்டோர் எம்எல்சி தொடரில் விளையாடி வருகின்றனர். அவர்களுடன் மிட்சலும் இணைந்துள்ளார். இதன் மூலம் சிஎஸ்கே அணி ரசிகர்கள் மிட்சலை, நம்ம ஆளுப்பா இவரு என்று கொண்டாடி வருகின்றனர்.