பெங்களூர்: ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் இருந்து வன்ஷ் பேடி கடைசி நேரத்தில் நீக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சிஎஸ்கே வீரர்கள் பட்டியலில் வன்ஷ் பேடி பெயர் இடம்பெற்ற நிலையில், கடைசி நிமிடத்தில் அவரின் பெயரை அடித்துவிட்டு மீண்டும் தீபக் ஹூடா பெயர் எழுதப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி களமிறங்கியுள்ளது. சிஎஸ்கே அணி ஏற்கனவே பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறிய நிலையில், இந்த போட்டியில் ஆர்சிபி அணியை வீழ்த்தி தொடர்ந்து தோல்விக்கு பின் ஆறுதல் வெற்றியையாவது பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் கடந்த சீசனில் அடைந்த தோல்விக்கும் சிஎஸ்கே அணி பதிலடி கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியிலும் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை.
இதன் காரணமாக சிஎஸ்கே அணியில் தீபக் ஹூடா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் ரசிகர்களை அதிகமாக கதறவிட்ட வீரர் தீபக் ஹூடா தான். ஏனென்றால் 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், வெறும் 31 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். 4 போட்டிகளில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
சிஎஸ்கே அணியின் ஆதரவாளர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் உட்பட பலரும் தீபக் ஹூடாவின் இடத்தில் வன்ஷ் பேடி களமிறக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். ஆனால் இந்த போட்டியிலும் வன்ஷ் பேடி சேர்க்கப்படவில்லை. இதனிடையே சிஎஸ்கே அணி பிளேயிங் லெவன் வீரர்களின் பட்டியல் ஷீட் வெளியாகி இருக்கிறது.
நடுவர்களிடம் அளிக்கப்படும் அந்த பேப்பரில் சிஎஸ்கே அணி பட்டியலில் வன்ஷ் பேடி பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் வன்ஷ் பேடி பெயர் அழிக்கப்பட்டு, அந்த இடத்தில் தீபக் ஹூடாவின் பெயர் சேர்க்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இன்றைய பயிற்சியின் போது வன்ஷ் பேடி சிறிய காயம் அடைந்ததால், இந்த மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.