பெங்களூர் : ஆர்சிபி அணியின் ரசிகர்கள் என்னை கிங் என்று அழைப்பதை கைவிட வேண்டும் என்று நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் 2 நாட்களில் தொடங்கவுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. இதற்காக இரு அணிகளை சேர்ந்த பயிற்சியாளர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு முன்பாக ஆர்சிபி அணி தரப்பில் ரசிகர்களுக்கான விளம்பர நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ஆர்சிபி அணி இம்முறை பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்தது. அதன்படி நேற்றிரவு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணி தரப்பில் அன்பாக்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோப்பைகளுடன் பங்கேற்ற ஆர்சிபி மகளிர் அணி வீராங்கனைகளுக்கு ஆர்சிபி அணி வீரர்கள் கார்ட் ஆஃப் ஹானர் மரியாதையை அளித்தனர்.
இதனை தொடர்ந்து மகளிர் அணி வீராங்கனைகள் கோப்பையுடன் மைதானத்தை சுற்றி வலம் வர, பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற அணியின் பெயரினை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று மாற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் ஆர்சிபி அணியின் புதிய ஜெர்சியை அணிந்து வீரர்கள் அனைவரும் போஸ் கொடுத்தனர்.
வழக்கமாக சிவப்பு மற்றும் கருப்பு வண்ணங்களில் இருக்கும் ஆர்சிபி அணியின் ஜெர்சி, இம்முறை ப்ளூ மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் மாற்றியுள்ளது. இதனை தொடர்ந்து நட்சத்திர வீரர் விராட் கோலி பேசுகையில், நாங்கள் அனைவரும் சென்னைக்கு மிக விரைவில் செல்ல வேண்டிய தேவை உள்ளது. ஏற்கனவே எங்களுக்கான பிரத்யேக விமானமும் தயாராக உள்ளது. ஆர்சிபி அணியின் ரசிகர்கள் என்னை "கிங்" என்ற அடைமொழியுடன் அழைப்பதை நிறுத்த வேண்டும்.
என்னை விராட் என்றே அழைக்கலாம். அந்த பெயரில் மட்டும் அழைக்க வேண்டும் என்று கோரி கொள்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் என்னை கிங் என்று அழைக்கும் போது, கூச்சமாக உள்ளது. இனியாவது என்னை விராட் என்றே அழையுங்கள். இந்த புதிய ஜெர்சியின் மூலமாக ஆர்சிபி அணியின் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பின் விராட் கோலி மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.