சென்னை: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ராகுல் திரிப்பாட்டி 5 ரன்களிலும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டக் அவுட்டாகியும் வெளியேறினர். 2வது ஓவரை வீசிய ஹேசல்வுட் சிஎஸ்கே அணியின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணிக்கு மிகப்பெரிய முன்னிலையை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
18வது ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை விளாசியது. அதிரடியாக ஆடிய ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் 32 பந்துகளில் 51 ரன்களை விளாசி அசத்தினார். கடைசி நேரத்தில் வந்த டிம் டேவிட் 8 பந்துகளில் 22 ரன்களை விளாசினார்.

11 ஓவர்களை வீசிய வேகப்பந்துவீச்சாளர்கள் பவுலிங்கில் 98 ரன்களையும், 9 ஓவர்களை வீசிய ஸ்பின்னர்களின் பந்தில் 95 ரன்களையும் ஆர்சிபி விளாசி இருக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணியின் 2வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 2012ஆம் ஆண்டு ஆர்சிபி அணி 204 ரன்களை விளாசி இருந்தது. ஆனாலும் அந்த இலக்கை சிஎஸ்கே அணி கடைசி பந்தில் எட்டி அபார வெற்றியை பெற்றது.
ஆனால் ஆர்சிபி அணிக்கு எதிராக 190 ரன்களுக்கு மேல் சிஎஸ்கே அணி சேஸிங் செய்து வென்றது 2018ல் தான். கடந்த 6 ஆண்டுகளாக சிஎஸ்கே அணி 190 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்து ஆர்சிபி அணியை வென்றதில்லை. கடந்த 4 முறை ஆர்சிபி அணி டிஃபெண்ட் செய்தே சிஎஸ்கே அணியை வீழ்த்தி இருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் குழப்பத்துடனே ஆட்டத்தை பார்த்தனர்.
இந்த நிலையில் குழப்பத்தை தீர்க்கும் வகையில் 2வது ஓவரிலேயே ஆர்சிபி அணியின் ஹேசல்வுட் மாஸ் சம்பவத்தை செய்தார். அந்த ஓவரின் 2வது பந்திலேயே ராகுல் திரிப்பாட்டி தேவையில்லாத ஷாட்டை விளையாடி 5 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் அதே ஓவரின் கடைசி பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
இதனால் சிஎஸ்கே அணி 8 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மேலும், ஹேசல்வுட்டுக்கு எதிரான ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து தடுமாறி வந்துள்ளார். இதுவரை டி20 கிரிக்கெட்டில் ஹேசல்வுட் - ருதுராஜ் நேருக்கு நேராக 3 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கின்றனர். அதில் 18 பந்துகளை எதிர்கொண்டுள்ள ருதுராக் வெறும் 9 ரன்களையும், 2 முறை விக்கெட்டையும் கொடுத்துள்ளார்.