சென்னை : ஐபிஎல் ஏலத்தில் ரூ.14 கோடி கொடுத்து சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்ட டேரல் மிட்சல் பெஞ்ச் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அனாலிஸ்ட் பிரசன்னா கணித்துள்ளனர்.
ஐபிஎல் தொடருக்கான முதல் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி களமிறங்கவுள்ளது. இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே சிஎஸ்கே அணி பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது. தொடக்க வீரர் கான்வே, வேகப்பந்துவீச்சாளர் பதிரனா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக சில வாரங்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் இடத்தை சிஎஸ்கே அணி எந்த வீரர்களை கொண்டு நிரப்ப போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் பிரபல அனலிஸ்டான பிரசன்னா இருவரும் சிஎஸ்கே அணியின் சாதக, பாதகங்கள் குறித்து தங்களின் யூட்யூப் சேனலில் பேசி இருக்கின்றனர்.
அதில், சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ், ரஹானே, டேரல் மிட்சல், சிவம் துபே, ஜடேஜா, தோனி, தீபக் சஹர், தீக்சனா, முஷ்டாஃபிசுர் ரஹ்மான், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் விளையாட வாய்ப்புகள் உள்ளது. ஏன் துஷார் தேஷ்பாண்டேவுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் என்றால், தோனிக்கு பிளேயிங் லெவனில் 10 வீரர்கள் வரை பேட்டிங் லைன் அப் இருக்க வேண்டும் என்று நினைப்பார்.
இதுமட்டுமல்லாமல் பேக் அப் வீரர்களாக சமீர் ரிஸ்வி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜித் சிங், ஆரவல்லி அவினாஷ் என்று தரமான வீரர்கள் இருக்கின்றனர். ஒருவேளை 4 ஸ்பின்னர்களை அணியில் இருக்க வேண்டும் என்று தோனி விரும்பினால், ரூ.16 கோடி கொடுத்து வாங்கப்பட்ட மிட்சல் நிச்சயம் பெஞ்ச் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. சிஎஸ்கே அதனை பற்றி கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டார்கள்.
பருத்தி மூட்டையை எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும் சிஎஸ்கே அணி குடோனில் வைக்க கொஞ்சம் கூட யோசிக்க மாட்டார்கள். ஏற்கனவே ரூ.16.25 கோடி கொடுத்து வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸே குடோனில் இருந்துள்ளார். ஒரேயொரு பிரச்சனை பதிரனாவின் இடத்தை எப்படி தோனி நிரப்புவார் என்பது தான். அதற்கு தோனி நிச்சயம் திட்டங்களை வைத்திருப்பார் என்று தெரிவித்துள்ளார்.