சென்னை : சிஎஸ்கே அணியின் கேப்டனாக எனக்கென்று ஒரு இடத்தை உருவாக்க நினைப்பதாக ருதுராஜ் கெய்க்வாட் தனது முதல் பேச்சிலேயே தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல்முறையாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கியதால் அவரின் பேச்சு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

டாஸின் போது ரவி சாஸ்திரி உடனடியாக, கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது எப்போது உங்களுக்கு தெரியும், ஜாம்பவான் வீரரின் இடத்தை நிரப்ப வேண்டிய பிரஷர் இருக்கிறா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ருதுராஜ் கெய்க்வாட், சிஎஸ்கே அணியின் கேப்டனாக களமிறங்கியுள்ளது பெருமையாக உள்ளது. ஆனால் யாருடைய இடத்தையும் நான் நிரப்ப விரும்பவில்லை. என்னுடைய ஸ்டைலில் என் பணியை செய்ய விரும்புகிறேன்.
சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமித்தது கடந்த வாரமே எனக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனின் போதே தோனி என்னிடம் சூசகமாக தயாராகி கொள் என்று கூறிவிட்டார். சிஎஸ்கே அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் நிறைய அனுபவங்கள் உள்ளது. கடந்த சீசனில் ஆடிய பதிரனா மற்றும் கான்வே இருவரும் இப்போது காயம் காரணமாக அணியில் இல்லை.
அவர்களுக்கு பதிலாக ரச்சின் மற்றும் மிட்சல் இருவரும் அணியில் இணைந்துள்ளனர். சேப்பாக்கம் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக தெரிகிறது. சிஎஸ்கே பிளேயிங் லெவனில் டேரல் மிட்சல், ரச்சின் ரவீந்திரா, தீக்சனா மற்றும் முஷ்டாஃபிசுர் ரஹ்மான் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் இளம் வீரரான சமீர் ரிஸ்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முதல் பேச்சிலேயே தோனியின் இடத்தை நிரப்ப விரும்பவில்லை என்று ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று ரசிகர்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தோனியை களத்தில் வைத்து எவ்வளவு சுதந்திரமாக ருதுராஜ் கேப்டன்சியை மேற்கொள்வார் என்ற சவாலும் அவருக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.