பெங்களூரு : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சாதகமாக மாறி உள்ளது வானிலை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு குறைந்து இருப்பதால் அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு அதிகரித்து இருக்கிறது.
2024 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணியை தீர்மானிக்க உள்ள முக்கியமான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. மே 18 அன்று நடைபெற உள்ள இந்த போட்டியில் மழை பெய்யக்கூடும் என இரு நாட்கள் முன்பு வானிலை அறிக்கை வெளியாகி இருந்தது.

போட்டியின் போது மழை பெய்து போட்டி கைவிடப்பட்டால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அப்படி நடந்தால் சிஎஸ்கே அணி 15 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் இடம் பெற்று பிளே-ஆஃப் முன்னேறும். பெங்களூரு அணி 13 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பெற்று பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும்.
இதன் காரணமாக பெங்களூரு அணி ரசிகர்கள் போட்டியின் போது மழை வரக்கூடாது என பிரார்த்தனை செய்து வந்தனர். அதற்கு ஏற்ப தற்போது வானிலை அங்கு மாறி உள்ளது. இந்த போட்டி நடைபெற உள்ள பெங்களூரு நகரில் இன்று காலையிலிருந்து மழை வெகுவாக குறைந்து விட்டதாகவும், மிகச் சில இடங்களில் சாரல் மழை மட்டும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
போட்டி நடைபெறும் நாள் (மே 18) அன்று மதிய வேளையில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், போட்டி நேரத்தின் போது மழைக்கான வாய்ப்பு 80 சதவீதத்தில் இருந்து 36 சதவீதம் என்ற நிலைக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வானிலை மாற்றத்தால் பெங்களூரு அணி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சிஎஸ்கே அணியை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடலாம் என கனவு கண்டு வருகின்றனர்.