பெங்களூரு : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான முக்கிய போட்டிக்கு முன் பேட்டி அளித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டிவைன் பிராவோ அந்த அணிக்கு மறைமுகமாக சவால் விட்டுள்ளார்.
2024 ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான போட்டியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையான போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. மழையால் போட்டி தடைபடக் கூடும் என கூறப்படும் நிலையிலும் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

இந்தப் போட்டியில் ஆர்சிபி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று அதிக நெட் ரன் ரேட் பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் திட்டம் குறித்து பிராவோ பேசினார். "எதிரணியை நாம் மதிக்க வேண்டும். ஆர்சிபி அணியையும் நாங்கள் மதிக்கிறோம். ஒரு பந்து வீச்சு குழுவாக நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களிடம் நல்ல திட்டங்கள் உள்ளன. எங்கள் திட்டத்தை முறியடித்து தான் ஆர்சிபி அணி வெற்றி பெற வேண்டும். ஒருவேளை அவர்கள் அதை செய்தால் அவர்கள் நன்றாக விளையாடினார்கள். ஒருவேளை அவர்கள் அதை செய்யாமல் விட்டால் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர்களை பார்க்கலாம்" என்றார் பிராவோ.
மேலும், "எங்கள் திட்டங்களை நான் இப்போது சொல்ல முடியாது. அதே சமயம் கடந்த சீசனிலும், இந்த சீசனிலும் எங்களிடம் நல்ல திறமையான இளம் பந்துச்சாளர்கள் உள்ளனர். டி20 கிரிக்கெட்டில் கடைசி ஓவர் பந்துவீச்சுதான் மிகவும் முக்கியம். பல சமயங்களில் போட்டியின் முடிவை அது தான் தீர்மானிக்கும்" என்றார் பிராவோ.
மேலும் மழை குறித்து பேசுகையில், "வானிலையை நாங்கள் கட்டுப்படுத்தவில்லை. எங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை குறித்து நாங்கள் அதிகம் கவலைப்பட மாட்டோம். பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இது எங்களுக்கு மற்றுமொரு போட்டி. ஒரு நல்ல அணிக்கு எதிராக நாங்கள் சவாலுடன் விளையாட இருக்கிறோம்" என்றார் பிராவோ.