பெங்களூரு : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது விராட் கோலி அதிரடியாக விளையாடி 29 பந்துகளின் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் அந்த அணியின் கேப்டன் ஃபாப் டுபிலேசிஸ் அதிரடி ஆட்டம் ஆடி அரை சதம் அடித்தார்.
இந்த நிலையில் மிட்செல் சான்ட்னர் வீசிய 13வது ஓவரின் கடைசி பந்தை ரஜத் படிதார் நேராக அடித்தார். பந்து எதிர்முனை ஸ்டம்ப்பை நோக்கி வந்தது. அதற்கு முன் சான்ட்னர் பந்தை கேட்ச் பிடிக்க முயன்றார். அப்போது பந்து அவரது விரலில் லேசாக உரசிய பின்னர் ஸ்டம்ப்பை தகர்த்தது. அப்போது டுபிலேசிஸ் கிரீசுக்குள் நின்று இருந்தார்.

எனினும், சந்தேகத்தின் அடிப்படையில் ரன் அவுட் கேட்டார் மிட்செல் சான்ட்னர். மூன்றாவது அம்பயர் ரீப்ளே செய்து பார்த்தார். அப்போது எதிர்முனையில் நின்று இருந்த ஃபாப் டுஃபிலேசிஸ் பேட்டை கிரீசுக்குள் வைத்திருந்தாலும் தரையில் இருந்து ஒரு இன்ச் மேலே பேட் இருந்தது. சரியாக பெயில்ஸ் ஸ்டம்ப்பை விட்டு எகிறும் போது அவரது பேட் ஒரு இன்ச் மேலே இருந்தது.
இதை அடுத்து மூன்றாவது அம்பயர் அவருக்கு ரன் அவுட் கொடுத்தார். இதை நேரலையில் பார்த்த பலருக்கும் டுஃபிலேசிஸ் பேட்டை தரையில் வைத்து இருந்ததாக தோன்றியது. இதை அடுத்து ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சிஎஸ்கே அணி மேட்ச் ஃபிக்ஸிங் செய்து விட்டதாகவும், அம்பயர் ஏமாற்றி விட்டதாகவும் புலம்பி வருகின்றனர். ஃபாப் டுஃபிலேசிஸ் 39 பந்துகளில் 54 ரன்கள் குவித்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறி இருந்தார். அப்போது ஆர்சிபி அணி 13 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 113 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே அணி 201 ரன்கள் எடுத்தால் பிளே ஆஃப் செல்லலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், சிஎஸ்கே அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆர்சிபி அணி பிளே ஆஃப் முன்னேறியது.