பெங்களூர்: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி களத்தில் எடுத்த மோசமான முடிவுகளே தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஃபீல்டிங் மாற்றங்கள், கலீல் அஹ்மத்-க்கு டெத் ஓவரில் பவுலிங் கொடுத்தது, பேட்டிங்கில் சிவம் துபேவுக்கு முன்பாக களமிறங்கியது என்று ஏராளமான தவறுகளை தோனி செய்திருந்தார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களை குவித்தது. சிஎஸ்கே அணியின் பவுலிங்கின் போது முதல் 2 ஓவர்களிலேயே கலீல் அஹ்மத் அதிக ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார்.

2 ஓவர்களை வீசியிருந்த கலீல் அஹ்மத் 32 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். நேற்றைய ஆட்டத்தில் அவர் பவுலிங்கில் ஃபார்மில் இல்லாதது தெரிந்து, கலீல் அஹ்மத்தை 19வது ஓவரை வீச தோனி அழைத்தார். அந்த ஓவரில் மட்டும் ரொமாரியோ ஷெப்பர்ட் 33 ரன்களை விளாசி தள்ளினார். அதேபோல் 2 சிக்சர் சென்ற போதே, கலீல் அஹ்மத்திடம் வந்து தோனி ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.
ஆனால் தோனி எந்தவித திட்டத்தையும் கொடுக்காமல், ஃபீல்டிங்கை மட்டும் மாற்றிக் கொண்டே இருந்தார். அதேபோல் ஜடேஜா பவுலிங்கில் 3 ஓவர்களை வீசி 26 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அவருக்கு கூடுதலாக ஒரு ஓவர் கொடுத்திருந்தால், எந்த சிக்கலும் வந்திருக்காது. அந்த வாய்ப்பையும் தோனி தவறவிட்டார்.
இதன்பின் போட்டி முடிவடைந்த பிறகு, சிஎஸ்கே பவுலர்கள் லோ ஃபுல் டாஸ் பந்துகளை வீச வேண்டும் என்று அட்வைஸ் கொடுப்பது எல்லாம் ஏன் என்று கூட புரியவில்லை. அதேபோல் பேட்டிங்கின் போது தோனி வரும் போதெல்லாம் உடனடியாக ஒரு ஸ்பின்னரை அட்டாக்கில் கொண்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. நேற்றைய போட்டியிலும் தோனி வந்தபின் சுயாஷ் சர்மா அட்டாக்கில் வந்தார்.
அந்த ஓவரை தோனி - ஜடேஜா இருவருமே அட்டாக் செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல் சிவம் துபே வந்திருந்தால், நிச்சயமாக சுயாஷ் சர்மா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டிருக்க மாட்டார். ஜடேஜா மற்றும் சிவம் துபே இருவருமே எளிதாக சிக்சர்களை விளாசி இருக்க முடியும். ஆனால் தோனி பேட்டிங் செய்ய முந்திக் கொண்டு வந்ததே சிஎஸ்கே தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது.
பவுலிங், பேட்டிங், கேப்டன்சி என்று மூன்றிலும் தோனி மோசமாக செயல்பட்டிருப்பது சிஎஸ்கே ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனால் சிஎஸ்கே அணி அடுத்த சீசனுக்கான அணியை தயார் செய்தாலும், தோனி ஓய்வை அறிவிப்பதே சிறந்த விஷயமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.