பெங்களூர்: ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, தற்போது தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் இடம்பெற்ற "நீ சிங்கம் தான்" என்ற பாடலை கூறியுள்ளார். தமிழ்ப் பாடல் மட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் வருகைக்காக போடப்படும் பாடலுக்கு விராட் கோலி ரசிகராக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இதனால் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் முதல் அணியாக இருக்கும் என்று அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதேபோல் குவாலிஃபையர் சுற்றில் ஆர்சிபி விளையாடும் என்றும் பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் ஆர்சிபி அணியின் விராட் கோலி ஆரஞ்ச் கேப் ரேஸிலும், ஹேசல்வுட் பர்பிள் கேப் பட்டியலில் முதலிடத்திலும் இருக்கின்றனர். இந்த சீசனில் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்மும் அபாரமாக உள்ளது. 10 இன்னிங்ஸில் ஆடியுள்ள விராட் கோலி, 6 அரைசதங்கள் உட்பட 446 ரன்களை விளாசி இருக்கிறார்.
இதனால் குறைந்தபட்சமாக இந்த சீசனில் மட்டும் 700 ரன்களை சேர்க்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றாலும், விராட் கோலி டி20 கிரிக்கெட்டை மிக எளியாக கையாள்வது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஆர்சிபி அணியின் சோசியல் மீடியாவில் பக்கத்தில் விராட் கோலியின் பேட்டி வெளியாகி இருக்கிறது.
அந்த பேட்டியில் விராட் கோலியிடம், தற்போது உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது என்று கேட்கப்பட்டது. அதற்கு விராட் கோலி, இந்த பதில் உங்களுக்கு கொஞ்சம் சர்ப்ரைஸாக இருக்கலாம். எனக்கு தற்போது மிகவும் பிடித்த பாடல், "நீ சிங்கம் தான்" என்று பதில் அளித்துள்ளார். விராட் கோலி தமிழ்ப் பாடல்களை கேட்பது தமிழக ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கடந்த 2 சீசன்களாக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் என்ட்ரி-க்கு அடிக்கடி பயன்படுத்தப்பட்ட பாடல், பத்து தல படத்தின் நீ சிங்கம் தான் பாடல்தான். அந்தப் பாடலை விராட் கோலி அதிகமாக கேட்பது சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. மேலும், நாளை மறுநாள் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.