பெங்களூர்: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான மதீஷா பதிரானா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்துள்ளார். அதிலும் இந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு விக்கெட் தேவையான போதெல்லாம் அபாரமாக செயல்பட்டு விக்கெட்டை வீழ்த்தி கொடுத்துள்ளார்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியில் மோசமான ஃபார்மில் உள்ள பதிரானா நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோனி மீண்டும் பதிரானாவுடன் களமிறங்கினார்.

இந்த ஐபிஎல் சீசனில் பதிரானா பழைய மாதிரி விக்கெட்டுகளையோ அல்லது தாக்கத்தையோ ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் பதிரானாவின் பவுலிங் ஆக்ஷம் மொத்தமாக மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து காயம் ஏற்பட்டதால், பதிரானாவின் ரிலீஸ் பாய்ண்ட் கொஞ்சம் மேலே உயர்ந்திருந்தது. இதனால் பதிரானா புதிய ஆக்ஷனில் பவுலிங் செய்ய தடுமாறி வந்தார்.
ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் மீண்டும் அவரை தயார் செய்ய வேண்டிய தேவை இருந்தது. மீண்டும் பழைய ஆக்ஷனுக்கு பதிரானாவை மாற்றியதால், அவரால் உடனடியாக பந்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அதிகளவிலான ஒய்டுகளை பதிரானா வீச தொடங்கி இருந்தார். இந்த சீசனில் மட்டும் சுமார் 30 ஒய்டுகளை வீசி இருந்தார். அதேபோல் யார்க்கர்களையும் பதிரானாவால் வீச முடியவில்லை.
இந்த நிலையில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பதிரானா 10வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் தேவ்தத் படிக்கலுக்கு கொஞ்சம் ஒய்டாக வேகத்தை குறைத்து வீசினார். அந்த ஓவரில் 3 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் தூக்கினார். தொடர்ந்து, 16வது ஓவரை வீச அழைக்கப்பட்ட போதும், 7 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் 18வது ஓவரில் ரஜத் பட்டிதார் விக்கெட்டை வீழ்த்தியதோடு, 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். கடைசி ஓவரில் 21 ரன்களை விட்டுக் கொடுத்தாலும், இந்த போட்டியில் பதிரானா கம்பேக் ஆட்டமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த போட்டிகளை விடவும் பதிரானா பந்தை கூடுதல் கட்டுப்பாட்டுடன் கையாண்டதோடு, யார்க்கர்களையும் சிறப்பாக வீசினார்.
அடுத்தடுத்த போட்டிகளில் யார்க்கர் மட்டும் துல்லியமாக வந்துவிட்டால், சிஎஸ்கே அணிக்கு ஒரு முக்கியமான சிக்கல் தீர்ந்துவிடும். இதனால் சிஎஸ்கே அணி பதிரானாவுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளை அளிப்பதோடு, அவருடன் கூடுதலாக பிரச்சனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து உரையாட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.