சென்னை : சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிய நிலையில், அவர் என்ன ரோலில் விளையாடுவார் என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
14 ஆண்டு கால சிஎஸ்கே அணியின் வரலாற்றில் ஒரே கேப்டன் தோனி மட்டும் தான். 2022ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் தோனி தானாக முன் வந்து ஜடேஜாவிடம் கேப்டன்சி அளித்த போதும், அந்த கேப்டன் பதவி மீண்டும் தோனியின் கைகளுக்கு வந்து சேர்ந்தது. இதன்பின் 2023 ஐபிஎல் சீசனில் தோனி தலைமையில் களமிறங்கிய சிஎஸ்கே அணி, கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இதன் மூலமாக சிஎஸ்கே அணி 5வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த நிலையில் தோனி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரேயொரு ஐபிஎல் சீசனில் விளையாட விரும்புவதாக தெரிவித்தார். அதன்படி இந்த ஐபிஎல் சீசன் தோனியின் கடைசி தொடராகவே பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வியும் எழுந்தது.
இதனிடையே சில வாரங்களுக்கு முன்பாக தோனி புதிய ரோலில் களமிறங்க போவதாக ஃபேஸ்புக்கில் அறிவித்தார். அந்த புதிய ரோல் என்ன என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஜியோ சினிமாஸ் தரப்பில் ஐபிஎல் தொடரின் புதிய புரோமோ வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நாளை ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் தோனி களத்தில் இருக்கும் போது அவ்வளவு எளிதாக கேப்டனாக செயல்பட முடியாது. ஜடேஜா கேப்டனாக செயல்பட்ட போதும், தோனியின் தலையீடு இருந்ததாக பார்க்கப்பட்டது. இதனால் இந்த சீசனில் தோனி இம்பேக்ட் பிளேயராக மட்டுமே விளையாட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக தோனி களமிறங்கும் பட்சத்தில் ருதுராஜ் கெய்க்வாட் சுதந்திரமாக கேப்டன்சி செய்வது எளிதாக இருக்காது. இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டிகளில் மட்டும் தோனி விளையாட வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் முதல் போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு, தோனி ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் தோனி எந்த ரோலில் விளையாடுவார் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.