மும்பை: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக தோனி விளையாடும் வரை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியால் கோப்பையை வெல்ல முடியாது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீஃப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதி இல்லாத நிலையில், பாகிஸ்தானில் ஐபிஎல் தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் நேரலையில் கருத்துக்களைத் தெரிவித்தனர். 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர்பான கிரிக்கெட் விவாத நிகழ்ச்சி பாகிஸ்தானில் பல்வேறு ஊடகங்களில் நடைபெற்று வருகிறது.

ஜியோ டிவி (Geo TV) என்ற தொலைக்காட்சி ஒன்றில் முன்னாள் வீரர்கள் முகமது அமீர், ரஷீத் லத்தீஃப் மற்றும் அகமது ஷேஷாத் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அப்போது அகமது ஷேஷாத் ஒரு கருத்தை கூறினார். "ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் முகமது அமீர் அந்த அணியில் ஆட வேண்டும்" என்றார் அகமது ஷேஷாத்.
அதற்கு பதிலளித்த ரஷீத் லத்தீஃப், சிஎஸ்கே அணியில் தோனி ஆடும் வரை ஆர்சிபி அணியால் கோப்பையை வெல்ல முடியாது என்று பதிலடி கொடுத்தார். இந்த விவகாரம் ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஆர்சிபி அணியில் விளையாடாத நட்சத்திர வீரர்களே இல்லை. அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெயில், யுவராஜ் சிங், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், சாஹல் என பல சிறந்த வீரர்கள் அந்த அணியில் விளையாடியுள்ளனர்.
அதிலும் ஒரே சீசனில் பல நட்சத்திர வீரர்கள் ஒன்றாக இணைந்து ஆடியும் கூட அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் விளையாடினால் மட்டும் ஆர்சிபி அணி கோப்பையை வென்று விடும் என்று அகமது ஷேஷாத் கூறியிருக்கிறார்.
இதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். 2024 ஐபிஎல் தொடர் மார்ச் 22 அன்று தொடங்க உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த முறை ஆர்சிபி அணி ரஜத் படிதார் தலைமையில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.