சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டுகள் கிடைத்தால் தனக்கு கொடுக்குமாறு இந்திய வீரர் அஸ்வின் பதிவிட்டுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு இருக்கும் எதிர்பார்ப்புக்கு நிகரான எதிர்பார்ப்பு, சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு ஏற்பட்டுள்ளது. மார்ச் 22ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது.

கடைசி முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் தோனி - கோலி இருவரும் விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடருக்கான தொடக்க விழாவும் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த தொடக்க விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சோனு நிகம், நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சி நடத்தவுள்ளனர்.
இதனால் ஒரே நாளில் கிரிக்கெட் மற்றும் இசை கச்சேரியை கண்டு ரசிக்கும் வகையில் ரசிகர்கள் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியை காண முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் மார்ச் 18ஆம் தேதியான இன்று சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான விக்கெட் விற்பனை தொடங்கியது. நேரடி டிக்கெட் விற்பனை கிடையாது என்பதால், பல்வேறு தரப்பினரும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெற முயற்சித்தனர்.
பேடிஎம் இன்சைடர் மற்றும் சிஎஸ்கே இணையதள பக்கத்தில் விக்கெட் விற்பனை தொடங்கியது. சிஎஸ்கே இணையதள பக்கத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கிய 10 நிமிடங்களுக்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இதனிடையே ஒரே நேரத்தில் பேடிஎம் செயலியில் சில தொழிற்நுட்ப கோளாறு காரணமாக 12 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியது.
அப்போது டிக்கெட் புக் செய்ய முயன்ற போது, முதலில் உள்ளே வருபவர்களுக்கு முன்னிலை என்ற அடிப்படையில் க்யூ முறை பின்பற்றப்பட்டது. ஏற்கனவே 18 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. இதனால் ரசிகர்கள் பலரும் விக்கெட் கிடைக்கவில்லை, சிஎஸ்கே அணி நிர்வாகம் மோசடி செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட்டுகளுக்கு அதிகபடியான டிமாண்ட் உள்ளது. எனது மகள்கள் இருவரும் தொடக்க விழா மற்றும் போட்டியை பார்க்க விரும்புகிறார்கள். சென்னை அணி நிர்வாகம் உதவி செய்யவும் என்று பதிவிட்டுள்ளார். சர்வதேச வீரருக்கு டிக்கெட்டுகள் கிடைக்காமல் இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.