பெங்களூர்: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி அடைந்த தோல்விக்கு, ஜடேஜாவின் மோசமான செயல்பாடுகளும், அவரின் பேட்டிங் மற்றும் களத்தில் விழிப்புடன் இருக்காததே காரணமாக அமைந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டியில் ஆர்சிபி அணியிடம் 2 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி நிர்ணயித்த 214 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சிஎஸ்கே அணி களமிறங்கியது. 3வது ஓவர் முதல் சிஎஸ்கே அணி எளிதாக ரன் ரேட்டை குறையவிடாமல் விளையாடிய போதும், கடைசி நேரத்தில் சிஎஸ்கே அணி செய்த சொதப்பல்கள் அந்த அணியின் தோல்விக்கு காரணமாகியுள்ளது.

இந்த போட்டியில் 17 வயதான இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே 48 பந்துகளில் 5 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 94 ரன்களை விளாசி தள்ளினார். அதேபோல் ஜடேஜா 45 பந்துகளில் 2 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 77 ரன்களை விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். இந்த போட்டியில் மேலோட்டமாக பார்க்கும் போது ஜடேஜா சிறப்பாக விளையாடியதாகவே பார்க்கப்படும்.
ஆனால் ஜடேஜாவின் தவறுகளே இந்த போட்டியில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜடேஜா 29 பந்துகளிலேயே அரைசதத்தை எட்டி இருந்தார். அதன்பின் கடைசி 3 ஓவர்களில் 9 பந்துகளை எதிர்கொண்ட ஜடேஜா வெறும் 13 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். செட்டிலான நிலையில் இருந்த ஜடேஜா தான் ஃபினிஷிங் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும்.
ஆனால் அவரோ 1 ரன் எடுத்துவிட்டு ஸ்ட்ரைக் தோனி மற்றும் துபேவிடம் கொடுத்து கொண்டே இருந்தார். இன்னொரு பக்கம் டிவால்ட் பிரெவிஸ் விக்கெட்டான போது, எதற்காக 2 ரன்களை ஓடினார் என்பது இதுவரை வெளிவராத சீக்ரெட். அதேபோல் டிஆர்எஸ் எடுக்காமல் காலத்தை கடத்தியது ஏன் என்றும் இதுவரை புலப்படவில்லை.
டிவியில் பார்த்த அனைவருக்கும் நடுவர் நிதின் மேனன் கொடுத்த தீர்ப்பு தவறு என்றும் தெரிந்திருந்தது. ஆனாலும் ஜடேஜாவுக்கு தெரியாமல், டிஆர்எஸ் அப்பீலுக்கு செல்லலாமா என்று ஆலோசித்திருந்தார். அதேபோல் மீண்டும் மீண்டும் லாங் ஆன், லாங் ஆஃப் திசையில் மட்டுமே ரன்களை சேர்ப்பேன் என்று ஜடேஜா நின்று கொண்டே இருந்தார். கொஞ்சமாவது வேறு திசையில் ரன்கள் சேர்த்திருக்க வேண்டும்.
இதனை தோனியே வெளிப்படையாக கூறியுள்ளார். சிஎஸ்கே அணியின் சீனியர் வீரராக இருந்து கொண்டு ஜடேஜா களத்தில் கொஞ்சம் கூட விழிப்புடன் செயல்படாதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிஎஸ்கே அணி இப்போதுதான் ஓரளவுக்கு ஃபார்முக்கு வந்த நிலையில், வெற்றிபெற வேண்டிய போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளனர்.