சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. அந்த அணி வெற்றி பெற்றதை கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் சேப்பாக்கம் மைதானத்தில் "ஆர்சிபி, ஆர்சிபி" என்ற கோஷம் விண்ணை முட்டியதைத்தான் நம்ப முடியவில்லை என சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
இது எப்படி நடந்தது? என சேப்பாக்கம் மைதான நிர்வாகத்தினரே குழம்பிப் போய் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆர்சிபி அணியின் ரசிகர்கள் பெருமளவில் மைதானத்தில் திரண்டது மட்டுமின்றி, அந்த அணி போட்டியில் ஆதிக்கம் செலுத்தியதாலும் அவர்கள் உற்சாகமடைந்து "ஆர்சிபி, ஆர்சிபி" என்ற கோஷத்தை வெளிப்படுத்தினர்.

மேலும், சிஎஸ்கே அணியினர் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியதால் அந்த கோஷத்துக்கு எதிர்வினை ஆற்ற முடியாமல் சிஎஸ்கே ரசிகர்கள் அமைதியாக இருந்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இதுவரை சேப்பாக்கம் மைதானத்தில் எதிரணியின் ரசிகர்கள் ஆதிக்கம் செலுத்திய சம்பவம் நடந்ததே இல்லை.
அதிலும், சிஎஸ்கே அணியின் பரம எதிரி அணியாக பார்க்கப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது மட்டுமில்லாமல், அந்த அணியின் ரசிகர்கள் ஒட்டுமொத்த மைதானத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது அனைவரையும் திகைக்க வைத்துள்ளது என்பதே உண்மை.
இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. பொதுவாக சிஎஸ்கே மைதானம் மந்தமாக இருக்கும் எனும் நிலையில் இந்த போட்டியில் அந்த அணி எளிதாக ரன் குவித்தது. இதே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற சிஎஸ்கே அணியின் போட்டி மந்தமான பிட்ச்சில் நடந்தது.
ஆனால், ஆர்சிபி போட்டி பந்துவீச்சுக்கு அதிக ஒத்துழைப்பு அளிக்காத ஒரு பிட்ச்சில் நடந்தது. அதை பயன்படுத்திக் கொண்ட ஆர்சிபி அணியின் பேட்ஸ்மேன்கள் முதலில் அதிக ரன்கள் குவித்தனர். அவர்கள் 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை சேர்த்தனர். அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துவக்கத்திலேயே விக்கெட்களை இழந்து சொதப்பியது.
சிஎஸ்கே அணி இறுதியில் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ரச்சின் 31 பந்துகளில் 41 ரன்களும், ஒன்பதாம் வரிசையில் இறங்கிய தோனி 16 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தனர்.