சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க விராட் கோலி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. 17 ஆண்டு கால ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை ஒரேயொரு முறைதான் ஆர்சிபி அணி வீழ்த்தியுள்ளது. 2008ஆம் ஆண்டு அனில் கும்ப்ளே தலைமையிலான ஆர்சிபி அணி அபார வெற்றியை பெற்றது.

அன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றிபெற முக்கிய காரணமாக அனில் கும்ப்ளே இருந்தார். அதேபோல் 2 சீசன்களுக்கு முன்பாக சிஎஸ்கே - ஆர்சிபி அணி ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியது. அந்த போட்டியில் ஆர்சிபி அணி வெறும் 70 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.
இதற்கு சிஎஸ்கே அணியின் ஸ்பின்னர்களும், மைதானம் சுழலுக்கு சாதகமாக இருந்ததுமே காரணமாக அமைந்தது. இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றிபெற்று ஆர்சிபியின் மோசமான வரலாற்றை மாற்றுமா என்ற ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதனிடையே ஆஃப்கானிஸ்தான் டி20 தொடருக்கு பின் விராட் கோலி கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ளார்.
2 மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட் பக்கமே வராத விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து ரசிகர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளன. இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு விராட் கோலி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த பயிற்சியின் போது விராட் கோலி சந்தித்த பெரும்பாலான பந்துகள் அவரின் மிடில் பேட்டில் எதிர்கொண்டுள்ளார். இது ஆர்சிபி அணியின் சக வீரர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 ஆண்டுகளுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் விராட் கோலி தவித்த போது, 6 வாரங்களுக்கும் மேலாக பேட்டை கையிலேயே எடுக்காமல் இருந்தார். அதன்பின் கிரிக்கெட் களத்திற்கு திரும்பிய விராட் கோலி, முதல் போட்டியிலேயே சதம் அடித்து கம்பேக் கொடுத்தார். இதனால் ஒரு சிறிய இடைவேளைக்கு பின் விராட் கோலி களமிறங்குவதால், அவரின் விக்கெட்டை சிஎஸ்கே அணி கைப்பற்றினால் தான் வெற்றியை பற்றி சிந்திக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.