சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக சிஎஸ்கே அணியின் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது தெரிய வந்துள்ளது.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடவுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடும் கேப்டன்கள் அனைவரும் பங்கேற்ற குரூப் போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைத்து கேப்டன்களும் பங்கேற்ற நிலையில், சிஎஸ்கே அணி சார்பாக ருதுராஜ் கெய்க்வாட் பங்கேற்றார்.

அந்த புகைப்படத்தை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டு, சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடருக்கு ஒருநாள் முன்பாக இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ஜடேஜா சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார்.
ஆனால் அந்த தொடரின் இடையிலேயே ஜடேஜா தனது சொந்த ஆட்டம் பாதிக்கப்படுவதாக கூறி, கேப்டன்சியில் இருந்து விலகினார். இதன் காரணமாக தோனி மீண்டும் கேப்டன் பதவியை ஏற்றார். இந்த நிலையில் தோனி கேப்டன்சியில் இருந்து விலகிய நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்த முடிவு மார்ச் முதல் வாரத்திலேயே சிஎஸ்கே அணி நிர்வாகம் எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் பயிற்சி முகாமிற்கு சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மார்ச் 2ஆம் தேதி சென்னை வந்தார். அப்போது சிஎஸ்கே அணியின் நிர்வாகிகளான சிஇஓ காசி விஸ்வநாதன், நிர்வாகிகளான சுந்தர் ராமன் மற்றும் சிஎஸ்கே உரிமையாளர்களின் குடும்பத்தினருடன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அவரின் மனைவி உட்கர்ஷா இருவரும் சந்தித்தனர். அதன்பின் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு விருந்து சாப்பிட்டது தெரிய வந்தது.
அந்த புகைப்படம் வெளியான நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன்சியில் மாற்றம் வர வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. தற்போது சிஎஸ்கே அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.