பெங்களூர்: ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு மிகச்சிறந்த சீசனாக அமைந்துள்ளது. இதுவரை ஆர்சிபி அணி விளையாடிய 11 போட்டிகளில் 8 வெற்றி, 3 தோல்வி உட்பட 16 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வென்றால் கூட ஆர்சிபி அணியால் எளிதாக டாப் 2 இடங்களில் நிறைவு செய்ய முடியும்.
ஆர்சிபி அணியின் இந்த எழுச்சிக்கு விராட் கோலி முக்கிய காரணமாக அமைந்துள்ளார். ஏனென்றால் மிகச்சிறந்த ஃபார்மில் உள்ள விராட் கோலி, இந்த சீசனில் 11 இன்னிங்ஸ்களில் 7 அரைசதங்கள் உட்பட 505 ரன்களை விளாசி இருக்கிறார். ஆரஞ்ச் கேப் ரேஸில் முன்னணியில் உள்ள விராட் கோலி, அதனை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விராட் கோலி தனது கடந்த கால வாழ்க்கை சம்பவங்கள், கேப்டன்சி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தது, நம்பர் 3 பேட்ஸ்மேனாக இந்திய அணிக்கு களமிறங்கியது, 2019 உலகக்கோப்பை அரையிறுதி தோல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேசி இருக்கிறார். அது விராட் கோலி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.
அதில், இந்திய அணிக்காக 7 முதல் 8 ஆண்டுகள் வரையும், ஆர்சிபி அணிக்காக 9 சீசன்களும் கேப்டனாக செயல்பட்டுள்ளேன். அந்த நேரத்தில் கேப்டனாக இருந்தாலும், ஒருநாளும் ஒரு பேட்ஸ்மேனாக எனக்கு எந்த அழுத்தமும் இருந்ததே கிடையாது. என் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறித்து பெரிதாக கண்டுகொண்டதே இல்லை.
அதேபோல் கேப்டனாக இல்லாத போதும், என் மீதான கவனம் ரசிகர்கள் மத்தியில் குறைந்ததாக கருதியது கிடையாது. ஏனென்றால் பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டுள்ளேன். அதேபோல் 24 மணி நேரமும் எனது செயல்பாடுகள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு கொண்டே இருந்தது. அது காலப்போக்கில் எதிர்கொள்வதற்கு கடினமாகவும், ஒரு கட்டத்தில் அதிக அழுத்தமாகவும் அமைந்தது.
அதேபோல் எனது வாழ்க்கையில் தொடர்ச்சியாக ஒரு மாதம் பேட்டை கையில் எடுக்காமல் இருந்தேன். அந்த நேரத்தில் என் மீது அதிக கவனம் இருந்தது மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு வரும் போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். சுதந்திரமாக கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று விரும்பினேன்.
நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்கியதற்கு தோனி மற்றும் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் ஆகியோருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் எனது ஆட்டத்தை பற்றி நன்றாக புரிந்து வைத்திருந்தேன். நம்பர் 3ல் விளையாடுவதற்கான திறமை அந்த நேரத்தில் என்னிடம் இல்லை. ஆனால் நன்றாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை மட்டுமே இருந்தது.
அந்த நேரத்தில் என் மீது நம்பிக்கை வைத்து, இயல்பான ஆட்டத்தை விளையாடுமாறு அறிவுறுத்தினார்கள். உன்னிடம் உள்ள எனர்ஜி மற்றும் ஆட்டத்தில் அளிக்கும் பங்களிப்பு இந்திய அணிக்கு முக்கியம் என்று தெரிவித்தார்கள். அதேபோல் கிரிக்கெட்டை பொறுத்தவரை ரன்கள் சேர்க்க பசி இருக்க வேண்டும். ஒருவேளை போதுமான ரன்களை எடுத்துவிட்டோம் என்று நினைத்தால், பின் ரன்கள் சேர்க்க முடியாது என்று தெரிவித்தார்.