சென்னை: சிஎஸ்கே அணியின் இளம் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பதிரானாவுக்கு ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தரமான பதிலடியை கொடுத்துள்ளார். பதிரானா வீசிய ஒரு பந்து விராட் கோலியின் ஹெல்மெட்டில் அடிக்க, அடுத்த பந்திலேயே சிக்ஸ் அடித்து விராட் கோலி மரண மாஸ் காட்டியுள்ளார்.
18வது ஐபிஎல் தொடருக்கான 8வது லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதன்பின் ஆர்சிபி அணிக்காக பில் சால்ட் - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. பில் சால்ட் தொடக்கம் முதலே அதிரடியாக ரன்களை குவித்தார்.

சிறப்பாக ஆடிய அவர் தோனியின் அபாரமாக ஸ்டம்பிங்கில் 32 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் படிக்கல் - விராட் கோலி கூட்டணி இணைந்தது. இதில் விராட் கோலி அடக்கி வாசிக்க, படிக்கல் அதிரடியாக சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ளினார். சிறப்பாக ஆடிய அவர் அஸ்வின் பவுலிங்கில் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பின் விராட் கோலி - ரஜத் பட்டிதார் கூட்டணி இணைந்தது. ஸ்பின்னர்களை எளிதாக ரஜத் பட்டிதார் சிக்ஸ் அடிப்பார் என்பதால், சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உடனடியாக பதிரானாவை அட்டாக்கில் கொண்டு வந்தார். அதேபோல் விராட் கோலியும் ரன்கள் சேர்க்க முடியாமல் தவித்து வந்தார். 10 ஓவர்களில் 93 ரன்கள் எடுத்திருந்த போது, விராட் கோலி 22 பந்துகளுக்கு 16 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார்.
அப்போது பதிரானா மீண்டும் அட்டாக்கில் வந்தார். அதில் பதிரானா வீசிய முதல் பந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் விராட் கோலியின் ஹெல்மெட்டில் அடித்தது. ஒரு நொடி விராட் கோலியே ஆடிப் போனார். ஏனென்றால் விராட் கோலி எந்த பந்தையும் அவ்வளவு எளிதாக மிஸ் செய்ய மாட்டார். இதன்பின் உடனடியாக பிசியோதெரபிஸ்ட் வந்து பரிசோதனை செய்தனர்.
தொடர்ந்து பதிரானா வீசிய 2வது பந்தும் பவுன்சராக வர, அதனை ஃபைன் லெக் திசையில் அபாரமாக சிக்ஸ் அடித்து பதிலடி கொடுத்தார். மீண்டும் 3வது பந்தில் பவுண்டரி அடித்ததோடு, பதிரானாவை பார்த்து சில வார்த்தைகளையும் பேசினார். இதனால் விராட் கோலி எனர்ஜியை பெற்றதாக ஆர்சிபி அணியின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் நூர் அஹ்மத் பந்தில் 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார்.