பெங்களூர்: சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிக அரைசதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி படைத்துள்ளார். அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்காக அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்த விராட் கோலி, 2016ஆம் ஆண்டுக்கு பின் இந்த சீசனில் தொடர்ச்சியாக 4 அரைசதங்களை விளாசி அசத்தி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் 52வது லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்பின் ஆர்சிபி அணிக்காக பெத்தல் - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. பெத்தல் பவுண்டரியாக விளாசித் தள்ள, இன்னொரு பக்கம் விராட் கோலி சிக்சருடன் தொடங்கினார்.

இந்த போட்டியில் வழக்கத்திற்கு மாறாக விராட் கோலி கூடுதல் அதிரடியாக விளையாடினார். ஸ்பின்னர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் என்று அனைவரையும் சிக்ஸ் பவுண்டரி அடித்தார். சிறப்பாக ஆடிய விராட் கோலி 29 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலியின் 7வது அரைசதம் இதுவாகும்.
இதனைத் தொடர்ந்து அதிரடியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்த போது, சாம் கரண் வீசிய ஸ்லோயர் பந்தில் விராட் கோலி 33 பந்துகளில் 5 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 62 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த இன்னிங்ஸில் விராட் கோலி ஏராளமான சாதனைகளை முறியடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்காக 300 சிக்சர்களுக்கு மேல் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அதேபோல் சிஎஸ்கே அணிக்கு எதிரான அதிக அரைசதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு எதிராக விராட் கோலி அடித்த 10வது அரைசதம் இதுவாகும். இந்த பட்டியலில் ஷிகர் தவான், டேவிட் வார்னர் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தலா 9 அரைசதங்களுடன் 2வது இடத்தில் உள்ளனர்.
அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்களை விளாசிய வீரர்களில் விராட் கோலி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்பாக பஞ்சாப் அணிக்கு எதிராக மட்டும் டேவிட் வார்னர் 1,134 ரன்களை விளாசி முதலிடத்தில் இருந்தார். இந்த போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலமாக விராட் கோலி, சிஎஸ்கே அணிக்கு எதிராக மட்டும் 1,146 ரன்களை விளாசி முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.