சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில், விராட் கோலி மிகவும் நிதானமாக ஆடியது விமர்சனத்தை சந்தித்துள்ளது. மற்ற பேட்ஸ்மேன்கள் ஓரளவு அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் சேர்த்த நிலையில், விராட் கோலி மட்டும் மிகவும் நிதானமாக ஆடியது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சில ரசிகர்களே, விராட் கோலி அவுட் ஆகாமல் பந்துகளை வீணடித்ததற்கு பதிலாக, அவுட் ஆகி மற்ற பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு அளித்திருக்கலாம் என விமர்சித்து வருகின்றனர்.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் பிலிப் சால்ட் களமிறங்கினர்.
பிலிப் சால்ட் அதிரடியாக ஆடினார். அவர் 16 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆனால், மறுபுறம் விராட் கோலி விக்கெட்டை தற்காத்து ஆடினாலும், அதிக பந்துகளை வீணடித்தார். ஒரு கட்டத்தில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 80க்கும் குறைவாக இருந்தது.
அப்போது மதீஷா பதிரானா வீசிய பந்து அவரது ஹெல்மெட்டை தாக்கியது. இதனால் கோபமடைந்த விராட் கோலி, அடுத்த இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்தார். இதனால் அவரது ஸ்ட்ரைக் ரேட் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
அதன் பின்னரும் அவர் நிதானமாகவே ரன் சேர்த்தார். 30 பந்துகளில் 31 ரன்கள் மட்டும் எடுத்து நூர் அகமது பந்துவீச்சில் ரச்சின் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் விராட் கோலி. பிலிப் சால்ட்டின் ஸ்ட்ரைக் ரேட் 200 ஆகவும், தேவதாத் படிக்கல்லின் ஸ்ட்ரைக் ரேட் 192 ஆகவும் இருந்தது. ஆனால், விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 103 ஆக இருந்தது. இதைத்தான் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
பின்னர் மற்ற பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடியதால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.