சென்னை : சிஎஸ்கே அணியின் துணை கேப்டனாக தோனி யாரை நியமனம் செய்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. முதல் போட்டியிலேயே ஆர்சிபி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி களமிறங்கவுள்ளது. சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் கடைசி சீசன் என்பதால், சேப்பாக்கம் மைதானத்தில் தோனி விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் பார்க்க ரசிகர்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் தோனியும் ரசிகர்களுக்காக விண்டேஜ் ஹேர்ஸ்டைலுடன் களமிறங்கவுள்ளார். பயிற்சியில் அசத்தி வரும் எம்எஸ் தோனி, கடந்த சீசனை போல் பேட்டிங்கில் ஃபார்மில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் ஸ்பெஷல் நிகழ்ச்சியாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தரப்பில் தோனியை மையமாக வைத்து முன்னாள் வீரர்களான ஜாகீர் கான், பார்த்தீவ் படேல் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் பேசினார்கள்.
அதில் பார்த்தீவ் படேல் பேசுகையில், தோனியை பொறுத்தவரை உழைப்பின் மூலமாகவே தனக்கான முடிவை எட்ட வேண்டும் என்று விரும்புவார். அது தான் அவரின் ஃபார்முலா. வெற்றி, தோல்விகளை கடந்து பிராசஸ் என்று தோனி சொல்வது ஒவ்வொருவரின் பணியை தான். அதேபோல் தனது அறிவாற்றலை தோனி அனைவருக்கும் பகிர்வார். பயிற்சி முகாமில் ஒவ்வொரு வீரருக்கும் தங்களின் திறமையை வெளிப்படுத்த சான்ஸ் அளிப்பார் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து சுரேஷ் ரெய்னா பேசுகையில், எம்எஸ் தோனிக்கு 42 வயதாகிவிட்டது. அதனால் தோனி ஓய்வுபெற்ற பின், சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன் தேவை. அதனால் இந்த சீசன் தோனிக்கு மட்டுமல்லாமல், சிஎஸ்கே அணிக்கும் முக்கியமானது. அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த வீரராகவும், கேப்டனாகவும் செயல்பட வாய்ப்புகள் உள்ளது. அவரை வழிநடத்துமாறு தோனி சொல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதனால் சிஎஸ்கே அணியின் துணை கேப்டன் யார் என்பது தான் என்னுடைய எதிர்பார்ப்பு. அதேபோல் எனக்கு தோனி இன்னும் 5 ஆண்டுகள் விளையாட வேண்டும் என்பது ஆசை என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஜாகீர் கான் பேசுகையில், தனக்கு மிகவும் பிடித்த விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பது என்பது சாதாரணம் கிடையாது. சில வீரர்கள் தங்களின் நேரம் முடிந்ததை அறியாமல் களத்தில் தோல்வியடைவதை பார்த்திருக்கிறோம். ஆனால் தோனி இங்கு வித்தியாசப்படுகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பாகவே கிரிக்கெட் மட்டுமே எல்லாம் அல்ல என்பதை தோனி புரிந்து கொண்டுவிட்டார். வாழ்வின் ஒரு பகுதியாக கிரிக்கெட்டை மாற்றிவிட்டு, மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.