சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதுவும் சிஎஸ்கே அணியின் கோட்டை என அழைக்கப்படும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயே இந்த படுதோல்வி சம்பவம் அரங்கேறி உள்ளது.
இதற்கு முக்கிய காரணமே சிஎஸ்கே அணியின் பேட்டிங் பலவீனமாக இருப்பது தான். இந்த முறை சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். ரச்சின் ரவீந்திரா சர்வதேசப் போட்டிகளில் ஆடி இருந்தாலும் அவருக்கு அதிக அனுபவம் இல்லை. எனினும். அவர் மட்டுமே இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக ஆடி உள்ளார்.

ரச்சினை தவிர்த்துப் பார்த்தால் ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே ஆகிய இருவர் மட்டுமே பேட்ஸ்மேன்களாக ஓரளவு அனுபவம் உள்ளவர்கள். அதற்கு பின் ஆல்ரவுண்டர்கள் மட்டுமே உள்ளனர். தோனி எட்டாவது அல்லது ஒன்பதாவது வரிசையில் தான் பேட்டிங் செய்ய விரும்புகிறார். அவர் அதிரடியாக ஆடினாலும் முன் வரிசையில் இறங்கினால் அது சிஎஸ்கே அணிக்கு உதவியாக இருக்கும்.
இவர்களைத் தவிர்த்து ராகுல் திரிபாதி துவக்க வீரராகவும், தீபக் ஹூடா நான்காம் வரிசையிலும் கடந்த இரண்டு போட்டிகளில் இறங்கினர். அந்த இரண்டு போட்டிகளிலும் அவர்களால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை. அவர்கள் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் சரியாகப் பொருந்தவில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.
ராகுல் திரிபாதியை நான்காம் வரிசையிலும், தீபக் ஹூடாவை ஆறாவது அல்லது ஏழாவது வரிசையிலும் விளையாட வைக்கலாம். இதற்கு முன்பும் மற்ற அணிகளில் அவர்கள் இருவரும் இது போன்ற பேட்டிங் வரிசையில் விளையாடி இருக்கிறார்கள். அந்த வகையில் பேட்டிங் வரிசையை தீர்மானிப்பதிலும் குழப்பம் நடந்துள்ளது.
அதே சமயம் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வதிலும் தவறு நடந்து இருக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையில் டெவான் கான்வே, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் போன்ற சர்வதேச அனுபவம் வாய்ந்த வீரர்கள் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்தனர்.
2025 ஐபிஎல் தொடரில் அவர்களுக்கு இணையான வீரர்களை அடையாளம் காண்பதில் சிஎஸ்கே அணி நிச்சயம் சொதப்பி இருக்கிறது. அதுதான் கடந்த இரண்டு போட்டிகளிலும் நடந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி பந்துவீச்சால் தான் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் பேட்ஸ்மேன்கள் ரச்சின் ரவீந்திரா மற்றும் ருதுராஜ் சிறப்பாக ரன் குவித்தனர். அதற்கு முக்கிய காரணம் பிட்ச் தான்.
அவர்கள் இருவரும் மந்தமான பிட்ச்சில் அபாரமாக ஆடுவதில் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். அதே சமயம் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் பிட்ச்சில் ருதுராஜ் நேற்று ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதுபோன்ற சம்பவங்கள் ஒரு சில போட்டிகளில் நடக்கத்தான் செய்யும். ஆனால், அப்போது மற்ற பேட்ஸ்மேன்கள் கை கொடுக்க தயாராக இருக்க வேண்டும்.
அங்கு தான் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை மோசமாக உள்ளது. சிஎஸ்கே அணியில் அவ்வளவு எளிதில் பிளேயிங் லெவனில் மாற்றங்கள் நடைபெறாது என்பதால் அடுத்த போட்டியிலாவது இதில் மாற்றம் இருக்குமா? அல்லது ராகுல் திரிபாதி மற்றும் தீபக் ஹூடாவை வைத்து பரிசோதனை முயற்சி தொடருமா? என்ற கேள்வி உள்ளது.