கவுகாத்தி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் ஃபீல்டிங் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. கடந்த போட்டியிலேயே ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கொடுத்த அல்வா கேட்சை தீபக் ஹூடா கோட்டைவிட்டது ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. தற்போது அதிரடி வீரர் ஹெட்மயர் கேட்சை ஜேமி ஓவர்டன் கோட்டைவிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 11வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டியிலும் சிஎஸ்கே அணி வீரர்களில் ஃபீல்டிங் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

கிளென் பிலிப்ஸ் போன்ற வீரர்கள் தங்களின் அபாரமான ஃபீல்டிங் மூலமாகவே ஆட்டத்தை மாற்றி காட்டிவிடுவார்கள். அதேபோல் டி20 கிரிக்கெட்டில் முக்கிய வீரர்களின் கேட்சை கோட்டைவிட்டால், அந்த அணி கூடுதலாக 20 முதல் 30 ரன்கள் வரை சேஸிங் செய்ய வேண்டிய துணை வரும். அந்த வகையில் சிஎஸ்கே அணி கடந்த போட்டியில் தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணமே ஃபீல்டிங் தான்.
ரஜத் பட்டிதாருக்கு மட்டும் 3 கேட்ச்களை கோட்டைவிட்டனர். இதனால் ஃபீல்டிங்கில் சிஎஸ்கே வீரர்கள் கடுமையாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் சிஎஸ்கே வீரர்களின் ஃபீல்டிங் மோசமாக அமைந்துள்ளது. ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஹெட்மயர் கொடுத்த அல்வா கேட்சை ஜேமி ஓவர்டன் கோட்டைவிட்டார்.
அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக தான் துருவ் ஜுரெல் கொடுத்த கடினமான கேட்சை பதிரானாவும், ஹசரங்கா கொடுத்த கேட்சை விஜய் சங்கரும் அபாரமாக பிடித்தனர். இவர்களை பாராட்டிய சில நிமிடங்களிலேயே தலைக்கு மேல் சென்ற பந்தை ஓவர்டன் கோட்டைவிட்டு மைதானத்திலேயே முட்டிப் போட்டி அமர்ந்துவிட்டார்.
இதனால் சிஎஸ்கே அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளரான ராஜீவ் குமார் வீரர்களுடன் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மைதானத்தின் மேற்கூரை வரை உயர பறக்கும் பந்துகளை பிடிக்க பயிற்சி அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.