கவுகாத்தி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி இன்று விளையாடவுள்ள நிலையில், பிளேயிங் 11ல் தீபக் ஹூடாவை சேர்க்கவே கூடாது என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். ஏனென்றால் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் ஹூடா ஆடியுள்ள 23 இன்னிங்ஸ்களில் 13 இன்னிங்ஸில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். இதனால் அவரை ஃபீல்டிங் செய்வதற்கு கூட சிஎஸ்கே அணி பயன்படுத்த தேவையில்லை என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கு சிஎஸ்கே அணி இன்று இரவு நடக்கவுள்ள ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவுள்ளது. இதனால் தோல்விக்கு மருந்தாக இந்த போட்டியில் வென்று கம்பேக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவுகாத்தி மைதானத்தை பொறுத்தவரை பிட்சில் கொஞ்சம் பவுன்ஸ் இருக்கும் என்று கருதப்படுகிறது. அதற்கேற்ப ஆர்ச்சர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் பவுன்சர் பந்துகளை வீசுவதில் வல்லவர்கள். அதேபோல் சிஎஸ்கே அணியிலும் விளையாடும் ஏராளமான வீரர்களுக்கு பவுன்சர் பந்துகளை எதிர்கொள்வதில் சிக்கல் உள்ளது.
குறிப்பாக தீபக் ஹூடாவுக்கு புவுன்சர் பந்துகளை விளையாடுவதில் சிக்கல் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தீபக் ஹூடாவால் சேப்பாக்கம் மைதானத்திலேயே ரன்கள் அடிக்க முடியாத அளவிற்கு மோசமான ஃபார்மில் இருக்கிறார். ஸ்பின்னர்களையே அட்டாக் செய்ய முடியாமல் திணறிய அவர், வேகப்பந்துவீச்சாளர்களை அடிப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.
அதுமட்டுமல்லாமல் 2023 முதல் கடைசியாக தீபக் ஹூடா ஆடிய 23 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 13 இன்னிங்ஸ்களில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து இருக்கிறார். அதேபோல் 2021ஆம் ஆண்டுக்கு பின் சிஎஸ்கே அணி 175 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ததே கிடையாது. இதனால் முதல் பேட்டிங் ஆடிவிட்டு, இலக்கை டிஃபெண்ட் செய்வதே சிஎஸ்கே அணிக்கு சரியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் தீபக் ஹூடாவுக்கு பதிலாக விஜய் சங்கர் அல்லது ஷேக் ரஷீத் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். கடந்த சில சீசன்களாக விஜய் சங்கர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கும் சூழலில், அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.