லண்டன்: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆடிய அதிரடி ஆட்டம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. வெறும் 17 பந்துகளில் 52 ரன்கள் குவித்து அவர் காட்டிய வேகம், அனுபவம் வாய்ந்த வீரர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஓராண்டாகவே வைபவ் சூர்யவன்ஷி தான் ஆடும் அனைத்து தொடர்களிலும் தொடர்ந்து ரன் குவித்து வரும் நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், அவரை உடனடியாக இந்திய சீனியர் அணியில் சேர்க்க வேண்டும் என்று பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், "வைபவ் எப்போது இந்திய அணியில் அறிமுகமாவார்? இது ஐபிஎல் தொடரின் ஆரம்பம்தான் என்றாலும், இன்னும் சில மாதங்களில் இந்திய அணி இங்கிலாந்தில் வெள்ளைப்பந்து தொடரில் (ஒருநாள், டி20) விளையாட உள்ளது. பிசிசிஐ புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால், அந்தத் தொடருக்கான டி20 அணியில் வைபவ்வைச் சேர்க்க வேண்டும். அவர் பிளேயிங் 11 பட்டியலில் இடம் பெறுகிறாரோ இல்லையோ, சீனியர் வீரர்களுடன் பயணிக்கும் அனுபவம் அவருக்குக் கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "15 வயது சிறுவன் ஒரு சுற்றுப்பயணத்திற்குச் செல்ல அனுமதி உண்டா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவருக்கு அந்த அனுபவத்தைக் கொடுப்பது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது. அவர் விளையாடுவதற்குத் தகுதியானவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஜோடி 75 ரன்கள் சேர்த்தது. இதில் வைபவ் தான் அதிக ரன்களைக் குவித்தார். இது குறித்து வாகன் பேசுகையில், "ஜெய்ஸ்வால் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். ஆனால் இன்று வைபவ் ஆடிய விதம் ஜெய்ஸ்வாலையே சாதாரணமாகத் தெரிய வைத்தது. ஜெய்ஸ்வால் பந்தைக் கணித்து நிதானமாக ஆட முயன்றார், ஆனால் இந்தச் சிறுவன் பந்தை மைதானத்திற்கு வெளியே அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் மட்டுமே இருந்தார். அவரிடம் இருக்கும் அந்த பயமில்லாத ஆட்டம் அபாரமானது" என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
இந்தப் போட்டியில் வைபவ் 52 ரன்கள் எடுத்த நிலையில், ஜெய்ஸ்வால் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். போட்டிக்குப் பிறகு பேசிய வைபவ், "ஜெய்ஸ்வால் தான் என்னிடம் சிக்ஸர்களை அடிக்குமாறு கூறினார். பந்து பேட்டில் நன்றாகப் படுவதால் சிங்கிள் அல்லது டபுள் எடுப்பதைப் பற்றி கவலைப்படாமல் அதிரடி காட்டுமாறு அவர் எனக்கு ஊக்கம் அளித்தார்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஏற்கனவே 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக அதிரடியாகச் செயல்பட்டு வைபவ் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. 15 வயதிலேயே ஜாம்பவான்களின் பாராட்டைப் பெற்றுள்ள வைபவ், இந்திய கிரிக்கெட்டின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
