சென்னை : ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக் கொடுத்த கேட்ச்சை சிஎஸ்கே வீரர் தீக்ஷனா தவறவிட்டார். இதை அடுத்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கடும் அதிருப்தி அடைந்தார். தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜடேஜா ஃபீல்டர்களால் பாதிக்கப்பட்டதால் கோபமடைந்தார்.
2024 ஐபிஎல் தொடரின் 61வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே சிஎஸ்கே அணியால் பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலை இருந்தது.

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் விக்கெட்டை விரைவாக வீழ்த்த முடியாத நிலையிலும் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்கள் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். முதல் ஆறு ஓவர்கள் பவர் பிளேவில் ராஜஸ்தான் அணி 42 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதன் பின் ஜெய்ஸ்வால் 24 ரன்கள் எடுத்த நிலையிலும், பட்லர் 21 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்து வெளியேறினர். அடுத்து சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் சேர்ந்து பேட்டிங் செய்தனர். அப்போது ரவீந்திர ஜடேஜா 12 ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை ரியான் பராக் ரிவர்ஸ் ஸ்வீப் செய்தார்.
பந்து பவுண்டரி எல்லையில் நின்றிருந்த இலங்கை சுழற் பந்துவீச்சாளர் தீக்ஷனா வசம் சென்றது. அவர் பந்தை கேட்ச் பிடித்த போதும், பின்னர் தடுமாறி பந்தை தவற விட்டார். இதை அடுத்து விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை ஜடேஜா இழந்தார். தீக்ஷனா செய்த ஃபீல்டிங் சொதப்பலை கண்ட கேப்டன் ருதுராஜ் கோபம் அடைந்து இறுக்கமாக நின்று இருந்தார்.
கடந்த போட்டியிலும் ஜடேஜா பந்து வீச்சில் மிட்செல் சான்ட்னர் ஓவர் த்ரோ செய்து நான்கு ரன்களை கூடுதலாக கொடுத்து இருந்தார். தற்போது சான்ட்னருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட தீக்ஷனா கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டு சொதப்பி இருக்கிறார். இதை அடுத்து ஜடேஜா கடும் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் ரியான் பராக் அதிரடியாக ஆடி ரன் குவித்து சிஎஸ்கே அணிக்கு அழுத்தம் கொடுத்தார்.