கவுகாத்தி: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் அனுபவ வீரரான நிதிஷ் ராணா 21 பந்துகளில் அரைசதத்தை எட்டி அசத்தியுள்ளார். 21 பந்துகளில் 4 சிக்ஸ், 7 பவுண்டரியை விளாசிய அவர், அஸ்வின் வீசிய ஒரே ஓவரில் 19 ரன்களை குவித்து சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பவுலிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணி தரப்பில் தீபக் ஹூடா மற்றும் சாம் கரண் இருவரும் நீக்கப்பட்டு விஜய் சங்கர் மற்றும் ஜேமி ஓவர்டன் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி தரப்பில் ஜெய்ஸ்வால் - சஞ்சு சாம்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. சிஎஸ்கே அணி தரப்பில் கலீல் அஹ்மத் முதல் ஓவரை வீசினார். கலீல் அஹ்மத் வீசிய முதல் பந்திலேயே கவர்ஸ் திசையில் ஜெய்ஸ்வால் பவுண்டரி உடன் தொடங்கினார். ஆனால் அடுத்த 2 பந்துகளிலேயே அவரின் விக்கெட்டை வீழ்த்தி கலீல் அஹ்மத் பதிலடி கொடுத்தார்.
இதன்பின் ராஜஸ்தான் அணி தரப்பில் நிதிஷ் ராணா களமிறங்கினார். கடந்த 2 போட்டிகளில் நம்பர் 4ல் களமிறங்கிய அவர், இன்று நம்பர் 3 பேட்ஸ்மேனாக வந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கேற்ப 2வது ஓவரிலேயே நிதிஷ் ராணா சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ள, மீண்டும் 4வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசினார்.
தொடர்ந்து ராணா விக்கெட்டை வீழ்த்த அஸ்வின் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 19 ரன்களை விளாசி தள்ளினார். பின்னர் பவர் பிளேவின் கடைசி ஓவரில் மீண்டும் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 15 ரன்களை விளாசினார். இதன் மூலமாக பவர் பிளே ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 79 ரன்களை எட்டியது.
அதுமட்டுமல்லாமல் 21 பந்துகளில் 4 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட அரைசதத்தை விளாசினார். இடதுகை பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதில் வல்லவரான அஸ்வினையே நிதிஷ் ராணா விளாசி இருப்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு இடியாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் அஸ்வினை 9 முறை எதிர்கொண்டுள்ள ராணா, ஒரு முறை கூட விக்கெட் கொடுத்ததில்லை.