கவுஹாத்தி: 2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இதில் சென்னை ரசிகர்களுக்குப் பெரிய வலியை ஏற்படுத்தியது அந்த அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம்தான். இந்த ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடும் ஜடேஜா, 3 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய ரவீந்திர ஜடேஜா, சென்னை அணியை எப்படித் திட்டமிட்டு வீழ்த்தினேன் என்பது குறித்து வெளிப்படையாகப் பேசினார். ஜடேஜா கூறுகையில், "இந்த பிங்க் நிற ஜெர்சி எனக்கு நன்றாகவே பொருந்துகிறது என்று நினைக்கிறேன். சிவம் துபேவை எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியும். சிஎஸ்கே அணியில் இருந்தபோது வலைப்பயிற்சியில் அவருக்கு நான் நிறையப் பந்துவீசி இருக்கிறேன். எனவே, அவர் சுழற்பந்து வீச்சாளர்களை எப்படி எதிர்கொள்வார் என்பது எனக்கு அக்குவேறு ஆணிவேறாகத் தெரியும். அவர் எனக்கு எதிராகப் பெரிய ஷாட்களை ஆட முயற்சிப்பார் என்பதை முன்கூட்டியே கணித்தேன். அவர் ஒரு சிக்ஸர் அடித்த பிறகும், திட்டமிட்டு ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பந்தை வீசி அவரை அவுட் செய்தேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "கவுகாத்தி ஆடுகளம் சற்று ஒட்டும் தன்மையுடன் இருந்தது. பந்து நன்றாகத் திரும்பியதால் பந்துவீச்சை மிகவும் ரசித்துச் செய்தேன். சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்வது மட்டுமே எனது வேலையாக இருந்தது, மீதியை ஆடுகளம் பார்த்துக்கொண்டது. கிரிக்கெட்டில் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இலக்கு 128 ரன்கள் எனச் சிறியதாக இருந்தாலும், கடினமாக உழைத்து 100 சதவீத பங்களிப்பை அளித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்" எனத் தெரிவித்தார்.

அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜாவை சிஎஸ்கே தக்கவைக்காதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. ஜடேஜா ஒரே ஓவரில் சர்பராஸ் கான் (17) மற்றும் சிவம் துபே (6) ஆகியோரை வீழ்த்தி சிஎஸ்கே அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். ஜடேஜாவின் இந்த 'வாக்குமூலம்' அவர் சிஎஸ்கே வீரர்களின் பலவீனத்தைத் துல்லியமாக அறிந்து வைத்துள்ளதைக் காட்டுகிறது. தங்களுக்குப் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்த ஜடேஜா, இன்று எதிரணியில் இருந்து தங்களையே வீழ்த்தியதைப் பார்த்துச் சென்னை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்ணீர் மல்கக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.