சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் நடைபெற உள்ள லீக் போட்டி, 2025 ஐபிஎல் தொடரின் எலிமினேஷன் போட்டியாக மாறவுள்ளது. ஆம், இந்த போட்டியில் தோல்வியடையும் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும் அபாயம் உள்ளது.
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடியதாகப் பலரும் கூறிவரும் நிலையில், அதற்கு இணையாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் மோசமாக விளையாடி வருகின்றன. இந்த மூன்று அணிகளுமே தலா எட்டு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளன. ஆறு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளன. இந்த மூன்று அணிகளுமே நான்கு புள்ளிகளுடன் உள்ளன. இந்த மூன்று அணிகளுக்குமே இன்னும் ஆறு லீக் போட்டிகள் மீதமுள்ளன.

இந்த நிலையில்தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் தோல்வியடையும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. ஏனெனில், இந்த இரண்டு அணிகளும் தங்களுக்கு மீதமுள்ள ஆறு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியும் என்ற சூழ்நிலை உள்ளது.
இதில் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால், அதன் பின் மீதமுள்ள ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் அதிகபட்சமாக 14 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். அதை வைத்து இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாது.
இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் 8 போட்டிகளின் முடிவில் 12 புள்ளிகளைப் பெற்றுள்ளன. மேலும் நான்கு அணிகள் 8 மற்றும் 9 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் உள்ளன. அந்த அணிகளில் சில அணிகள் 16 புள்ளிகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த ஆண்டு 16 புள்ளிகளைப் பெறும் அணி மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
எனவே, சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டியில் ஒரு அணி தோல்வியடையும் பட்சத்தில், அந்த அணியால் அதிகபட்சமாக 14 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். அதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அந்த அணி இழக்கும். எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதும் போட்டி தகுதி நீக்க (எலிமினேஷன்) போட்டியாக நடைபெற உள்ளது.
இந்த வாழ்வா, சாவா? போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறுமா அல்லது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இதே நிலைதான் உள்ளது. அந்த அணியும் இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிடும்.