சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியை நேரில் காண நடிகை ஸ்ருதிஹாசன் வந்திருந்தார். இந்த போட்டியின் ஒவ்வொரு பந்தையும் பதற்றத்துடன் பார்த்த ஸ்ருதிஹாசன், சிஎஸ்கே அணியின் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்கலங்கிய சம்பவம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் ஐதராபாத் அணி முதல்முறையாக சிஎஸ்கே அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி இதுவரை 2 ல் மட்டுமே வென்றுள்ளது. 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்ததால், சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துள்ளது.

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி முதல் பாதியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே அணி வெறும் 27 ரன்களை மட்டுமே சேர்த்தது மிகப்பெரிய பின்னடைவாக மாறியது. பவுலிங்கிலும் சாம் கரண் கொடுத்த ஷாக், ஐதராபாத் அணிக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தியது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை பார்க்க ஏராளமான நட்சத்திரங்கள் குவிந்தனர். குறிப்பாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார் குடும்பத்துடன் வந்து போட்டியை கண்டு ரசித்தார். அவருடன் ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோரும் வந்திருந்தனர். அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வந்து போட்டியை பார்த்தார்.
இதனை அறிந்த சிஎஸ்கே அணியின் டிஜே, உடனடியாக அஜித் குமார் மற்றும் சிவகார்த்திகேயன் பாடல்களை ஒலிக்கவிட, சேப்பாக்கம் மைதானமே அதிரத் தொடங்கியது. இதுமட்டுமல்லாமல் நடிகர் ஸ்ருதிஹாசனும் சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்தார். ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய நட்சத்திரங்கள் குவிந்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
நடிகை ஸ்ருதிஹாசன் கடைசி வரை நின்று போட்டியை கண்டு ரசித்தார். இறுதியாக சிஎஸ்கே அணி தோல்வியை சந்திக்க, அப்போது அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்கலங்கினார். மைதானத்தில் இருந்து கண்ணீரை துடைத்த ஸ்ருதிஹாசனின் வீடியோவும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.