சென்னை: சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பதிரானா இதுவரை ஆடிய 7 இன்னிங்ஸ்களில் 24 ஒய்டுகளை வீசி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி ஒவ்வொரு பந்துக்கும் பதற்றத்துடன் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடியுள்ள 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணி ஏராளமான ஓட்டைகள் இருப்பதாக தோனியே ஒப்புக் கொண்டுள்ளார்.

ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகிய பின், அவருக்கான மாற்று வீரரை கண்டறிய முடியாமல் சிஎஸ்கே அணி நிர்வாகம் இதுவரை திணறி வருகிறது. அவரது இடத்தில் வந்த ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடினாலும், பெரிய ஸ்கோரை எடுக்க கூடிய வீரராக உருவாகுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் சிவம் துபேவுக்கு உதவியாக வேறு யாரும் மிடில் ஆர்டரில் இல்லாததால், தடுமாறி வந்தது. தற்போது டிவால்ட் பிரெவிஸ் வரவு சிஎஸ்கே அணிக்கு புதிய புத்துணர்ச்சியை கொண்டு வந்துள்ளது. ஆனால் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மதீஷா பதிரானாவின் மோசமான பவுலிங் தான். ஏனென்றால் 2023 சீசனில் சிஎஸ்கே கோப்பையை வெல்ல பதிரானா முக்கிய காரணமாக இருந்தார்.
ஆனால் தற்போது சிஎஸ்கே அணியின் ஒய்டு லாரியாக பதிரானா மாறி இருக்கிறார். இந்த சீசனில் மட்டும் பதிரானா 7 இன்னிங்ஸில் ஆடியுள்ள நிலையில், மொத்தமாக 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். அதேபோல் மொத்தமாக 24 ஒய்டுகளை வீசி இருக்கிறார். அதாவது ஒரு போட்டிக்கு சராசரியாக 4 ஒய்டுகளையாவது வீசி இருக்கிறார்.
இதனை பதிரானா கட்டுப்படுத்தவில்லை என்றால், சிஎஸ்கே அணிக்கு கூடுதல் பிரச்சனை உருவாகும். அதுமட்டுமல்லாமல் பதிரானாவின் பவுலிங்கின் போது விக்கெட் கீப்பர் தோனி கூடுதல் பதற்றத்துடன் இருக்கிறார். ஏனென்றால் எப்போது ஒய்டு வீசுவார் என்பது தெரியாததால், எந்த நேரத்தில் இடதுகை பக்கம் டைக் அடிக்க தோனி தயாராக இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.