சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் கேப்டன்சியில் இம்முறை ஏராளமான சிக்கல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கூட பதிரானாவை தாமதமாகவே அட்டாக்கில் தோனி கொண்டு வந்தது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டதாக பார்க்கப்படுகிறது.
மும்பை அணிக்கு பும்ரா எப்படியோ, ஆர்சிபி அணிக்கு ஹேசல்வுட் எப்படியோ அதுபோல் சிஎஸ்கே அணிக்கு பதிரானா செயல்பட்டு வந்தார். 2023 மற்றும் 2024 ஆகிய சீசன்களில் பதிரானாவின் பவுலிங் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்தது. டெத் ஓவர்களில் முக்கியமான பேட்ஸ்மேன்களை யார்க்கர்கள் மூலமாக பதிரானா சிதறடித்தார்.

அந்த அளவிற்கு பதிரானாவின் செயல்பாடுகள் இருந்ததால், அவரை சிஎஸ்கே அணி நிர்வாகம் ரீடெய்ன் செய்தது. இந்த நிலையில் பதிரானாவின் பவுலிங்கில் சில பிரச்சனைகள் இருந்தாலும், மீண்டு வருவதற்கான நல்ல சமிக்ஞைகளை காட்டி வருகிறார். ஆனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் பதிரானாவை பயன்படுத்துவதில் தொடர்ந்து தடுமாறி வருகிறது.
சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்ட போது, பதிரான 12 ஓவரில் தான் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். தற்போது தோனி கேப்டனான போதும் கூட பதிரானா 12வது ஓவரில்தான் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டு வருகிறார். நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணிக்கு சாதகமாக ஆட்டம் திரும்பியது சாம் கரண் வீசிய 10வது ஓவரில்தான்.
ஒருவேளை பதிரானா முன்னதாக அட்டாக்கில் கொண்டு வரப்பட்டிருந்தால், ஐதராபாத் அணிக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டிருக்கும். அதேபோல் அனிகேத் வர்மா போன்ற இளம் வீரர்கள் பதிரானாவின் பந்தை கணிக்க முடியாமல் தடுமாறினார்கள். அவர்களின் விக்கெட்டையும் பதிரானாவால் எளிதாக வீழ்த்தி இருக்க முடியும்.
ஆனால் 12வது ஓவரில் கிட்டத்தட்ட ஆட்டம் ஐதராபாத் அணி பக்கம் சென்ற போதுதான் தோனி பதிரானாவை அட்டாக்கிலேயே கொண்டு வந்தார். இதனால் பதிரானாவை பவர் பிளேவிலேயே ஒரு ஓவர் அல்லது பவர் பிளேவுக்கு பின் 2 ஓவர்கள் வீச வைத்து பயன்படுத்த வேண்டும் என்று விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் வரும் போட்டிகளிலாவது பதிரானாவின் திறமையை சிஎஸ்கே அணி சரியாக பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.