சென்னை: ஐபிஎல் மெகா ஏலத்தில் தவறு செய்து விட்டதாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் ஒப்புக் கொண்டுள்ளார். சில வீரர்களின் காயங்கள் சிஎஸ்கே அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறிய ஃபிளமிங், சிஎஸ்கே பிளேயிங் லெவனில் மாற்றங்கள் செய்ததும் பெரியளவில் தாங்கள் நினைத்த முடிவுகள் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் சுற்றுக் கனவு முடிவுக்கு வந்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி ஐதராபாத் புதிய வரலாறு படைத்துள்ளது.

ஆர்சிபி, டெல்லி ஆகிய அணிகளைத் தொடர்ந்து ஐதராபாத் அணிக்கு எதிராகவும் இருந்து வந்த சிஎஸ்கே அணியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர். சிஎஸ்கே அணியின் இந்த தோல்விக்கு, ஐபிஎல் மெகா ஏலத்தில் செய்த தவறே காரணமாக பார்க்கப்படுகிறது. அதனை சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்கும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளமிங் பேசுகையில், ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கிய வீரர்களின் செயல்பாட்டிற்கு ஏற்ப எங்களின் ஆட்டம் அமைந்துள்ளது. டி20 கிரிக்கெட் வளர்ந்து வரும் நிலையில், சிஎஸ்கே அணியின் ஸ்டைல் குறித்து ஆராய வேண்ட்ிய நிலையில் உள்ளோம். சில போட்டிகளில் எதிரணிகளின் சிறந்த ஃபீல்டிங் ஆட்டத்தை மாற்றியுள்ளது.
ரியான் பராக் கேட்சிற்கு பின், தற்போது கமிண்டு மெண்டிஸ் கேட்ச் ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்துவிட்டது. ஐபிஎல் தொடரில் இத்தனை ஆண்டுகளாக செய்த சாதனைகள் குறித்து பெருமை கொள்கிறோம். எங்களின் ஸ்டைல் எப்போதும் ஒரே மாதிரியானதுதான். தற்போது வேறு ஸ்டைலில் செல்ல வேண்டிய தேவை உள்ளது. அதற்கு தயாராக அதிக நேரம் எடுக்காது என்று நம்புகிறோம்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி சொதப்பிவிட்டது என்பதை விடவும், மற்ற அணிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள் என்று எடுத்து கொள்ளலாம். அதேபோல் காயமடைந்த சில வீரர்களால் சிஎஸ்கே அணி பின்னடைவை சந்தித்துள்ளது. வெற்றிபெறுவதற்கான திட்டத்தை உருவாக்கவே நாங்கள் கஷ்டப்பட்டுள்ளோம். அதிக மாற்றங்களை செய்து பார்த்திருக்கிறோம். ஆனால் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.