சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அஜின்க்யா ரஹானே 2024 ஐபிஎல் தொடரில் படுமோசமாக ஆடி வருகிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 12 பந்துகளில் வெறும் 9 ரன்கள் எடுத்து சொதப்பினார்.
அதன் பின் டேரில் மிட்செல் 52, ருதுராஜ் கெய்க்வாட் 98, சிவம் துபே 39 ரன்கள் குவித்து 20 ஓவர்களில் 212 ரன்கள் சேர்த்தனர். எனினும், சிஎஸ்கே அணி 230 ரன்கள் எடுக்க வேண்டிய இடத்தில் 212 ரன்கள் மட்டுமே எடுத்ததாக ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். ரஹானே துவக்க வீரராக இறங்கி 12 பந்துகளை வீணடித்ததே காரணம் என கூறி வருகின்றனர்.

2024 ஐபிஎல் தொடரில் அஜின்க்யா ரஹானே இதுவரை 9 போட்டிகளில் 170 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 123 ஆக உள்ளது. பேட்டிங் வரிசையில் முதல் மூன்று இடங்களில் மட்டுமே பேட்டிங் செய்து வரும் அஜின்க்யா ரஹானே இத்தனை குறைவான ஸ்ட்ரைக் ரேட்டுடன் இருப்பது 2024இல் டி20 போட்டிகளில் நடைமுறைக்கு ஒத்து வராத ஒரு விஷயம்.
இதை அடுத்து பலரும் அஜின்க்யா ரஹானேவை சிஎஸ்கே அணியில் இருந்து நீக்க வேண்டும் என கூறி வருகின்றனர். பலரும் சுரேஷ் ரெய்னாவை சுட்டிக் காட்டி வருகின்றனர். ரெய்னா தற்போது ஓய்வு பெற்று விட்ட போதும் அவருக்கு இன்னும் ஓய்வு பெறும் வயது வரவில்லை என பலரும் கூறி வரும் நிலையில் ரஹானேவை நீக்கி விட்டு ரெய்னாவை சிஎஸ்கே அணியில் சேர்த்தால் கூட அதனால் அதிக ரன் கிடைக்கும் என தீவிர சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி உள்ளனர்.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 212 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 134 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. ரஹானேவின் மோசமான பேட்டிங் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. எனினும், அடுத்த போட்டியில் ரஹானேவை நீக்கி விட்டு ரச்சின் ரவீந்திரா அல்லது இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.