சென்னை: 2024 ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 6 வெற்றிகளை பெற்று ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி புதிய ப்ளூபிரிண்டை கொடுத்துள்ளதாக சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார். பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதே சிஎஸ்கே அணியின் இலக்கு என்று கூறிய அவர், எதிர்காலத்தின் மீதும் கண்களை வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் நாளைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி களமிறங்க உள்ளது. ஐதராபாத் அணி மற்றும் சிஎஸ்கே ஆகிய இரு அணிகளும் புள்ளிப் பட்டியலில் கடைசி 2 இடங்களில் இருக்கிறது. இரு அணிகளில் யார் ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழப்பார்கள். இதனால் போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

அதேபோல் சிஎஸ்கே அணி அடுத்தடுத்து இளம் வீரர்களை களமிறக்கி ஆச்சரியம் கொடுத்து வருகிறது. இதனால் நாளைய ஆட்டத்தில் பேபி ஏபிடி வில்லியர்ஸ் எனப்படும் டிவால்ட் பிரெவிஸ் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து ஸ்டீபன் ஃபிளமிங் பேசுகையில், அடுத்த 6 போட்டிகளிலும் வென்று பிளே ஆஃப் செல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த சீசனில் ஆர்சிபி அணி அதற்கான ப்ளூபிரிண்டை கொடுத்துள்ளது. அதனால் சிஎஸ்கே அணிக்கு இப்போதும் வாய்ப்புகள் உள்ளது. பிளே ஆஃப் சுற்று மீது ஒரு கண் வைத்துக் கொண்டே, இந்த போட்டியில் சிறந்த வீரர்களை களமிறக்குவதிலும் உறுதியாக இருக்கிறோம். அதேபோல் 6 போட்டிகளிலும் வெல்ல முடியவில்லை என்றால், மோசமான சீசனில் என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்வோம்.
இதற்கு முன்பாக 2 சீசன்கள் எங்களுக்கு மோசமானதாக அமைந்துள்ளது. அந்த சீசனில் இருந்து வந்து அடுத்த சீசனிலேயே கோப்பையை வென்றுள்ளோம். அதனால் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்றாக அறிவோம். சிஎஸ்கே அணியின் முக்கியமான அங்கமாக இந்திய வீரர்களே இருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக ராயுடு, ரஹானே போன்றோர் முக்கிய அங்கமாக இருந்துள்ளனர்.
ஒருபோதும் சிஎஸ்கே அணியில் இளம் வீரர்களை விலக்கி வைத்ததில்லை. ஆயுஷ் மாத்ரேவுக்கு கடந்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவரின் ஆட்டம் சிஎஸ்கே அணிக்கு பலம் சேர்க்கிறது. எதிர்காலம் மீது ஒரு கண்ணை வைத்திருப்பதும் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணியின் பேலன்ஸ் மிகவும் முக்கியம். இளைஞர்கள், அனுபவ வீரர்களின் கலவையாக சிஎஸ்கே அணி இருக்கும் என்று தெரிவித்தார்.