CSK vs SRH: முழு பூசணிக்காயை மறைத்த ருதுராஜ்.. ஆமை ஆட்டம் ஆடிவிட்டு பழியை பவுலர்கள் மீது போடுவதா?
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான வாழ்வா-சாவா போராட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆடிய மிக மந்தமான ஆட்டம் அந்த அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. ஆனால், போட்டி முடிந்த பிறகு தனது பேட்டிங் சொதப்பலை ஒப்புக்கொள்ளாமல், தோல்விக்கு பந்துவீச்சாளர்கள் மீது பழிபோட்டு ருதுராஜ் அளித்துள்ள விசித்திரமான விளக்கம் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன், கார்த்திக் சர்மா, பிரெவிஸ் போன்ற வீரர்கள் 160-க்கும் மேலான ஸ்டிரைக் ரேட்டில் அதிரடியாக ரன் குவித்த நிலையில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மட்டும் 21 பந்துகளைச் சந்தித்து வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் வெறும் 71.4 ஆக மட்டுமே இருந்தது. ஒரு தொடக்க வீரராக அவர் ஆடிய இந்த மந்தமான ஆட்டம், சிஎஸ்கே அணியின் ஸ்கோர் 200 ரன்களைத் தாண்ட முடியாமல் போனதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

விசித்திரமான பதில்
பின்னர் 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி, 19 ஓவர்களிலேயே வெற்றியை எட்டிப் பிடித்தது. போட்டிக்குப் பிறகு தோல்வி குறித்துப் பேசிய ருதுராஜ், தனது மந்தமான பேட்டிங் குறித்து ஏதும் கூறாமல் பந்துவீச்சாளர்களைக் குறை கூறினார். "நாங்கள் விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, எதிரணி மீது அழுத்தம் கொடுக்கத் தவறிவிட்டோம். ஒரு விக்கெட்டை எடுத்த உடனேயே அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். அதை எங்களால் செய்ய முடியவில்லை" என்று ஒரு விசித்திரமான காரணத்தைக் கூறினார்.
ருதுராஜின் இந்த விளக்கத்தைக் கேட்டு வர்ணனையாளர் ரவி சாஸ்திரி உள்ளிட்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். ரவி சாஸ்திரி மறைமுகமாக ருதுராஜின் ஸ்டிரைக் ரேட் குறித்துக் கேள்வி எழுப்பியும், அதை ஒப்புக்கொள்ள ருதுராஜ் தயாராக இல்லை. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், "தனது மந்தமான பேட்டிங்கை சுயபரிசோதனை செய்யாமல் பந்துவீச்சாளர்கள் மீது பழிபோடுவது ஒரு கேப்டனுக்கு அழகல்ல" என்று ரசிகர்கள் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர்.
பிளே-ஆப் கனவு சிதையுமா?
இந்தத் தோல்வியால் சிஎஸ்கே அணி 13 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் தவிக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன. தற்போது 4-வது இடத்திற்கு சிஎஸ்கே, பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஆகிய 5 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
வரும் மே 21-ம் தேதி குஜராத் அணிக்கு எதிராக நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே சிஎஸ்கே-வின் பிளே-ஆப் கனவு நூலிழையில் நீடிக்கும். கேப்டன் ருதுராஜின் இந்த மெத்தனமான அணுகுமுறை சிஎஸ்கே-வின் எதிர்காலத்தைப் பாதிக்குமோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது அவரது கேப்டன் பதவியையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications