சென்னை: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் சிஎஸ்கே அணி தரப்பில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ரச்சின் ரவீந்திரா, விஜய் சங்கர் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகிய 3 பேர் நீக்கப்பட்டு டிவால்ட் பிரெவிஸ், தீபக் ஹூடா மற்றும் சாம் கரண் ஆகிய 3 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி களமிறங்கியுள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே மற்றும் ஐதராபாத் ஆகிய இரு அணிகளும் கடைசி 2 இடங்களில் இருக்கின்றன. இருந்தாலும் இன்னும் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு இரு அணிகளுக்கும் இருக்கிறது. இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் தங்களின் 3வது வெற்றிக்காக களமிறங்கி இருக்கிறது.

இந்த சீசனில் சிஎஸ்கே அணி சொந்த மண்ணில் ஆடிய 4 போட்டிகளில் 3ல் தோல்வியை சந்தித்துள்ளது. இருப்பினும் ஐதராபாத் அணி மீதி சிஎஸ்கே அணி செலுத்தி வரும் ஆதிக்கத்தை தொடரும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதன்பின் பேட் கம்மின்ஸ் பேசுகையில், நாங்கள் பவுலிங்கை தேர்வு செய்கிறோம். சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடுவது எப்போதும் மிகப்பெரிய ஆட்டமாகவே இருக்கிறது. கடந்த 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளோம். ஆனால் இம்முறை புதிய அணிக்கு எதிராக, புதிய மைதானத்தில் விளையாடுகிறோம். எங்களின் பேட்ஸ்மேன்கள் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார்கள் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி பேசுகையில், நாங்கள் பவுலிங் செய்யவே விரும்பினோம். அதற்கு பனிப்பொழிவு மட்டுமே காரணம். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும். எங்களுக்கு மட்டுமல்லாமல் ஐதராபாத் அணிக்கும் அழுத்தம் இருக்கிறது. போட்டியில் அடிப்படைகளை சரியாக செய்ய வேண்டும்.
இனி வரும் 6 போட்டிகளிலும் அதனை செய்ய வேண்டும். 6 போட்டிகள் என்று நினைக்காமல், ஒவ்வொரு போட்டியாகவே வெற்றிபெற வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம். சொந்த மண்ணில் சில காம்பினேஷன்களை முயற்சித்து வருகிறோம். அதேபோல் அனைத்து வீரர்களின் மீதும் நம்பிக்கை இருக்கிறது. இந்த பிட்ச் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.
இந்த போட்டிக்காக 2 மாற்றங்கள் செய்துள்ளோம். ரச்சின் ரவீந்திரா மற்றும் விஜய் சங்கர் நீக்கப்பட்டு, பிரெவிஸ் மற்றும் தீபக் ஹூடா சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல் சிஎஸ்கே அணியின் 3வது மாற்றமாக ஜேமி ஓவர்டன் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சாம் கரண் கொண்டு வரப்பட்டுள்ளார். இதனால் சிஎஸ்கே அணி கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.